பக்கம் எண் :

முதற் காண்டம்119

     தேம்பாவணிப் பகுதியுடன் ஒப்புநோக்கத் தக்கது. 'இடிக்குஞ் செல்'
என்றாரேனும், 'செல்லின் இடி' என்பது கருத்தாகக் கொள்க.
 
                     30
கடையு கத்தினிற் கருமுகி லுருமொடு விழும்போற்
படைமு கத்தினிற் பார்பதைத் தஞ்சவீழ்ந் தனன்றன்
புடைய கத்தினிற் புணர்ந்தவா ளுருவியென் றெய்வ
முடையு ரத்தினை யுணர்மினென் றிருஞ்சிரங் கொய்தான்.
 
கடை யுகத்தினில் கரு முகில் உருமொடு விழும் போல்,
படை முகத்தினில் பார்பதைத்து அஞ்ச வீழ்ந்தனன் தன்
புடை அகத்தினில் புணர்ந்த வாள் உருவி, "என் தெய்வம்
உடை உரத்தினை உணர்மின்!" என்று இருஞ்சிரம் கொய்தான்

     யுக முடிவில் கரு மேகம் இடியோடு விழுவது போல், நிலம் பதைத்து
அஞ்சுமாறு போர்க்களத்தில் வீழ்ந்த அவ்வரக்கனது இடையின் ஒரு பக்கம்
பொருந்தியிருந்த வாளைத் தாவிதன் உருவி, பிலித்தையரை நோக்கி, "என்
இறைவன் கொண்டுள்ள வல்லமையை இதன்மூலம் உணர்ந்து கொள்ளுங்கள்!"
என்று கூறி, அவனது பெரிய தலையைக் கொய்தான்.

     யுகம் - ஓர் உலகம் தொடங்கி முடியும் வரையுள்ள காலம்.
'கடையுகம்' என்பதனை 'யுகக் கடை' என மாற்றுக.
 
                     31
கூனெ டும்பிறை குழைந்தவாய் நிரைநிரை தோன்ற
வூனெ டுந்திரை யொழுகவாங் கனைவருங் கூச
நீனெ டும்பொறை நிகர்தலை தூக்கினா னொன்னார்
மானெ டும்படை மருண்டுளைந் துளமுறிந் தோட
 
கூன் நெடும் பிறை குழைந்த வாய் நிரைநிரை தோன்ற,
ஊன் நெடுந்திரை ஒழுக, ஆங்கு அனைவரும் கூச,
நீல் நெடும் பொறை நிகர் தலை தூக்கினான், ஒன்னார்
மால் நெடும் படை மருண்டு உளைந்து உளம் முறிந்து ஓட.