பக்கம் எண் :

முதற் காண்டம்131

புரப்ப ஓர் பொது முறை பொறாத தன்மையால்,
கருப்பம் ஓர் எழு மதி கடக்கும் முன் வினை
பரிப்ப ஓர் சிறப்பு அருட் பயத்தின் சூல் செயிர்
விருப்பமோடு இறையவன் விலக்கினான் அரோ.

     அப்பாவத்தினின்று சூசையைக் காக்க ஒரு பொது முறை பொறாது
என்பதால், கருப்பம் ஓர் ஏழு மாதம் கடக்குமுன் அவ்வினையை
அறுத்தொழிக்கவென்று ஒரு சிறப்பான திருவருட் பயனால் ஆண்டவன்
சூலோடு அமைந்த அப்பாவத்தை விருப்பத்தோடு சூசையிடமிருந்து
நீக்கினான்.

     'அரோ' அசைநிலை:

 
              51
தீயவை விலக்கிய சிறப்பிற் றேவருட்
டூயவை பதிவரத் தொகையிற் சூலிடத்
தாயவை யறிந்தில ளளவி லுண்மகிழ்
தாயவள் வியப்புறீஇத் தளர்வற் றோங்கினாள்.
 
தீயவை விலக்கிய சிறப்பின், தேவு அருள்
தூயவை பதி வரத் தொகையின் சூல் இடத்து
ஆயவை அறிந்திலள், அளவுஇல் உள் மகிழ்
தாய் அவள் வியப்பு உறீஇ, தளர்வு அற்று ஓங்கினாள்.

     கருவினைப் பாவத்தோடு தொடர்ந்த தீயவற்றை யெல்லாம் நீக்கிய
சிறப்பினோடு, தெய்வ அருளால் தூயனவாகப் பதிந்த வரங்களின்
தொகையால் தன் கருப்பத்தினுள் நிகழ்ந்தவற்றை அறியாதவளாய், அளவில்லாது உள்ளம் மகிழ்ந்த தாயாகிய நீப்பி என்பவள் வியப்படைந்து,
தளர்வு நீங்கி எழுச்சி கொண்டாள்:
 
                 52         
தேன்முகம் புதைத்த சூல் செறித்த சீர்கொடு
கான்முகம் புதைத்தவிழ் கமலப் பூவெனச்
சூன்முகம் புதைத்தசீர்த் தொகைபு றப்படத்
தான்முகம் புதைத்தொளி தயங்குந் தாயரோ.
 
தேன் முகம் புதைத்த சூல் செறித்த சீர் கொடு
கான் முகம் புதைத்து அவிழ் கமலப் பூ என,
சூல் முகம் புதைத்த சீர்த் தொகை புறப்பட,
தான் முகம் புதைத்து ஒளி தயங்கும் தாய் அரோ.