பக்கம் எண் :

முதற் காண்டம்159

     'புண்ணிய சாங்கோபாங்க முயற்சி' என்ற நூலில், அல்போன்சு
ரொதிரிகேஸ் சே. ச. என்பவர் புனித தோமாஸ், புனித ஆன்செல்ம்
ஆகியவர்களின் கருத்தை விளக்கும் பொழுது எழுதுகின்றார்: "துறவி
மரத்தைக் கனிகளோடு கடவுளுக்குக் கையளிக்கிறான்.
உலகிலுள்ளவர்களோ கடவுளுக்கு மரத்தின் கனிகளை மட்டும்,
அதாவது பல நற்செயல்களைக் கொடுக்கின்றனர்." (பதினெட்டாம்
போதகம். அதி. 3).

     'மாதோ' அசைநிலை.

                     36
காயொடு மரந்தந் தாற்போற் கடித்துற வருமை வெஃகி
வேயொடு நெருங்குங் கானில் விழைந்துதா னொழுக னன்றோ
தீயொடு குழைமற் றோருஞ் செவ்வுறச் செலுத்த னன்றோ
தூயுடு வுணர்வோ யென்னச் சொற்றினான் குரவ னம்மா.
 
"காயொடு மரம் தந்தாற் போல் கடித் துறவு அருமை வெஃகி,
வேயொடு நெருங்கும் கானில் விழைந்து தான் ஒழுகல் நன்றோ?
தீயொடு குழை மற்றோரும் செவ்வு உறச் செல்லுதல் நன்றோ,
தூய் உடு உணர்வோய்?" என்னச் சொற்றினான் குரவன் அம்மா

     மூத்தோன், "தூய விண்மீன் போல், அறிவொளி கொண்டவனே,
காயோடு மரத்தைத் தந்தாற் போல் முற்றத் துறத்தலின் அருமையை விரும்பி,
மூங்கிலோடு மற்ற மரங்களும் நெருங்கும் காட்டில் தான் மட்டும் பயன் பெற
விரும்பி அற நெறியில் நடத்தல் நல்லதோ? அல்லது, நாட்டில் இருந்து
கொண்டு, தீமையால் குழையும் மற்றோரும் செவ்விய நெறியில் நடக்கச்
செலுத்துதல் நல்லதோ?" என்று சொன்னான்.

                     37
பெற்றற மணிந்த நல்லோய் பிறர்மனை விளைத்த செந்தீ
யற்றற வோடித் தன்வீ டழன்றதே போல வேட்கைப்
பற்றற வுணர்த்தி யுள்ளம் பற்றிய நசையில் வெந்தா
லிற்றற வுறுதி யென்னோ வென்றன னரிய சூசை.