பக்கம் எண் :

முதற் காண்டம்187

விழுமாறு, இவ்வுலகத்தின்மீது தீராப் பழி கொண்ட பேய் இனங்கள்
தடுப்பாரின்றி இங்கே ஆண்டுகொண்டிருப்பது நல்லதோ?"

     தறை-'தரை' என்ற சொல்லின் கடைப் போலி.
 
                        19
முன்னா ளினிதி னீயுரைத்த முறையாற் பகைத்த வெறித்தலையை
யின்னாள் மனுவா யவதரித்தீங் கெய்தி மிதிக்கி லாகாதோ
பன்னா ளுலகங் கொண்டபழிப் பகையை யெண்ணு வதுநன்றோ
வன்னா ளெம்மேற் காட்டியபே ரன்பின் றெண்ணி லாகாதோ.
 
"முன் நாள் இனிதின் நீ உரைத்த முறையால், பகைத்த வெறித்
                                          தலையை
இந் நாள் மனுவாய் அவதரித்து ஈங்கு எய்தி மிதிக்கில், ஆகாதோ?
பல் நாள் உலகம் கொண்ட பழிப் பகையை எண்ணுவது நன்றோ?
அந் நாள் எம் மேல் காட்டிய பேர் அன்பு இன்று எண்ணில்
                                          ஆகாதோ?-  

     "முற்காலத்தில் நீ இனிதாகச் சொல்லிய முறைப்படியே, உன்னையும்
மனிதரையும் பகைத்த பேயின் தலையை இந்நாளில் நீ மனிதனாய்
அவதரித்து இவ்வுலகில் வந்து மிதித்தால், அது தகாத செயலோ? பல
காலமாய் உலகம் கொண்ட பாவப் பழியாகிய பகையை எண்ணி
அவதாரங்கொள்ளத் தாமதித்தல் நல்லதோ? வாக்களித்த அந்நாளில் எம்
மேல் காட்டிய பேரன்பை இன்று நினைவு கூர்ந்தால், அது தகாதோ?"

     முன் நாள் உரைத்தது: "ஆண்டவராகிய கடவுள் பாம்பை நோக்கி,
'உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்திற்கும் அவளுடைய வித்திற்கும்
இடையே பகையை உண்டாக்குவேன். அது உன் தலையை நசுக்கும். நீ
அதன் குதிங்காலைத் தீண்ட முயலுவாய்," என்றார். (ஆதியாகமம் 3:14-15).
பெண்-கன்னி மரியாள். வித்து - அவள் பெற்றெடுத்த கடவுளும்
மனிதனுமாகிய இயேசு. அது: மூல மொழியில், அவன் அவள் அது என்ற
மூன்றிற்கும் பொதுவாக வழங்கும் இச்சொல்லை, 'அவன்' என்று கொண்டு
இயேசுவுக்கும், 'அவள்' என்று கொண்டு மரியாளுக்கும் உரியதாக்குவது
உண்டு. 'அது' அல்லது 'அவன்' என்று கொண்டாலுமே, இயேசு அலகையை
வென்ற பணியில் அவர் தம் தாய் என்ற முறையில் மரியாளுக்கும்
உரியதோர் பங்கு உண்டு.