பக்கம் எண் :

முதற் காண்டம்24

     'துய் கலந்த நெல்' என்றதனால், நெல்லைப் பதரும் சண்டும் நீக்கிக்
கொண்டது பெறப்படும். களத்து வந்து இரந்தோருக்கு இரு கை நிறைய
வாரிக் கொடுத்ததோடு, இல்லத்து வந்து இரப்போர்க்கும் கொடுக்கத்
தொகுத்தனர் என்பது கருத்து.

                     வாழ்க்கை வளம்

     - மா, கூவிளம், -மா, கூவிளம்.
     
             16
ஈத லோடிசை யினிய வாழ்வுக
ளாத லோடற னழிவி லாக்கினர்
காத லோடுடல் கடிய நாள்வர
வீத லோடுறும் வீட்டில் வாழ்வரே.
 
ஈதலோடு இசை இனிய வாழ்வுகள்
ஆதலோடு அறன் அழிவு இல் ஆக்கினர்;
காதலோடு உடல் கடிய நாள் வர
வீதலோடு உறும் வீட்டில் வாழ்வரே.

    சூதேய நாட்டார் இரவலர்க்கு ஈதலோடு அதனால் வரும் புகழும்,
இனிய வாழ்வுகள் அமைவதோடு புண்ணியமும் அழிவில்லாத முறையில்
தமக்கு ஆக்கிக் கொண்டனர். அதனால், தம் உடலை விட்டுப் பிரிய நாள்
வரவும் ஆசையோடு மடிவர்; மடிந்ததும் தாம் சென்று சேரும் வான் வீட்டில்
நல்வாழ்வு பெறுவர்.

    ''ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
    ஓதியம் இல்லை உயிர்க்கு''

என்ற குறள் (231) இங்கு ஒப்புநோக்கத்தக்கது.
       
              17
மறமொ டாகுல மலிந்த தீதெலாம்
புறமொ டாகையின் பொருவி லாவள
ரறமொ டான்றசூ தேய நாடமை
திறமொ டாண்மையைச் செப்பச் சீரதோ
 
மறமொடு ஆகுலம் மலிந்த தீது எலாம்
புறமொடு ஆகையின், பொருவு இலா வளர்
அறமொடு ஆன்ற சூதேய நாடு அமை
திறமொடு ஆண்மையைச் செப்பச் சீரதோ?