பக்கம் எண் :

முதற் காண்டம்275

                  156
மன்னரது மன்னனினி துன்னரிய வொண்டவமே
துன்னலொடு துன்னுபய னின்னமகர் காட்டுமென
தாவிதது சந்ததியின் மேவியிவர் வேய்ந்துறவே
யேவினை னந்தனென வாவியறை வார்சிலரே.
 
"மன்னரது மன்னன் இனிது உன்ன அரிய ஒண் தவமே
துன்னலொடு, துன்னு பயன் இன்ன மகர் காட்டும் என,
தாவிது அது சந்ததியின் மேவி இவர், வேய்ந்து உறவே
ஏவினன் அனந்தன்." என ஆவி அறைவார் சிலரே.

     "மன்னர் மன்னனாகிய தாவிதன் நினைத்தற்கரிய சிறந்த தவத்தை
இனிதாக அடைந்திருந்ததனோடு, அதனால் அடைய வேண்டிய பயனை
அவன் வழியில்வந்த இம்மக்கள் காட்டுவார்கள் என்ற தன்மையாக,
முடிவற்றவனாகிய ஆண்டவன் இவர்களைத் தாவிதனின் சந்ததியில் வந்து
பிறந்து, திருமணம் புனைந்து வாழுமாறு ஏவியுள்ளான்." என்று சிலர்
ஆசையோடு கூறுவர்.

     தாவிதன் தவத்தால் துன்னு பயன்: 3ஆவது, வளன் சனித்த படலம்,
பாடல் 38 - 40 காண்க.
 
                    157
பொழுதுமிவர் பூணிருமை யெழுதுமறை காட்டுமென
மெழுதுமறை யொன்றெனினும் பழுதிலிரு கல்லெழுத
வேண்டியது நீதியென மாண்டமறை காட்டுமிவர்
மீண்டிவரைக் காட்டுமறை யீண்டறிது மென்றறைவார்.
 
"பொழுதும் இவர் பூண் இருமை எழுது மறை காட்டும் என,
எழுது மறை ஒன்று எனினும், பழுது இல் இரு கல் எழுத
வேண்டியது நீதி என மாண்ட மறை காட்டும் இவர்;
மீண்டும் இவரைக் காட்டு மறை; ஈண்டு அறிதும்." என்று
                                    அறைவார்.

      "எப்பொழுதும் இவ்விருவர் பூண்டு ஒழுகும் இல்லற துறவறமாகிய
இருமை அறங்களை ஆண்டவன் எழுதித் தந்த வேதம் காட்டவேண்டும்
என்பதுபோல, எழுதிய வேதம் ஒன்றே யாயினும், அதனைப்பழுதில்லாத
இருகற்களில் எழுதவேண்டியது முறை என்று செய்தமையால், மாண்புள்ள