பக்கம் எண் :

முதற் காண்டம்32

     கொய் தெடுத்த தெங்கு இளநீர்க் காய்களை இட்டு வைத்த
வண்டிகளும், இனிமை பொருந்திய கரும்புகளைச் சுமக்கும் வண்டிகளும்,
தன் நிறைந்த ஒளியுடன் விளங்கும் மலர்களை இட்டு வைத்த வண்டிகளும்,
நிலைத்த ஒளியுடைய பலவகை இரத்தினங்களைக் கொண்டுள்ள
வண்டிகளும், -

     தேங்கு - 'தெங்கு' என்பதன் நீட்டல் விகாரம். பன்மணி - நீலம்,
மரகதம், கோமேதகம், வைரம், வைடூரியம், பவளம், முத்து, புட்பராகம்,
மாணிக்கம் என்னும் நவமணிகள்.
     
               32
துளித்த தேறலைத் துவலை சோலைசூழ்
களித்த நாடெல்லாங் கசடில் வாழ்வுறச்
சுளித்த மள்ளர்கள் தூண்டு மேற்றினந்
திளைத்த பண்டிகள் நெருங்கித் தேயுமால்.
 
துளித்த தேறலைத் துவலை சோலை சூழ்
களித்த நாடு எலாம் கசடு இல் வாழ்வு உற,
சுளித்த மள்ளர்கள் தூண்டும் ஏற்று இனம்
திளைத்த பண்டிகள் நெருங்கித் தேயும் ஆல்.

     தேனை மழையாகப் பெய்த சோலைகள் சூழப் பெற்றுக் களித்த
சூதேய நாடு முழுவதும் குறையில்லாத நல்வாழ்வு பெறுமாறு, சினங்கொண்ட
உழவர்கள் தூண்டிச் செலுத்தும் காளை இனம் எழுச்சியோடு இழுத்துச்
செல்லும் மேற்குறித்த பல வண்டிகளும் ஒன்றோடொன்று நெருங்கிச்
செல்வதனால் தேயும்.

     'தேறலைத் துவலை துளித்த சோலை' என மாற்றிக் கூட்டுக.
'ஏற்று இனம்' என்றதனால், எருமைக் கடா எனவும் கொள்க.
     
               33
பாய்ந்த தேங்கதின் பழங்கள் வீழ்ததால்
வாய்ந்த வாழைமா வருக்கை யாசினி
சாய்ந்த தீங்கனி சரிந்த தேன்புனல்
தோய்ந்த வாயெலா மினிமை தோய்ந்தன.
 
பாய்ந்த தேங்கு அதின் பழங்கள் வீழ்தலால்,
வாய்ந்த வாழை மா வருக்கை ஆசினி
சாய்ந்த தீம் கனி சரிந்த தேன் புனல்
தோய்ந்த வாய் எலாம் இனிமை தோய்ந்தன.