பக்கம் எண் :

முதற் காண்டம்378

வல்ல வள் வளி உருத்து அதிர, வான் உயர்
பல்லவ மரமும் மேல் படர் பொன் வல்லியும்,
ஒல், அவை, அலைவு உறீஇ வளையும் உண்மை போல்,
இல்லவள் கொழுநனோடு இடுக்கண் எய்தினாள்.

     எதையும் அசைக்க வல்ல கடுங்காற்று சினந்து அடிக்கவே,
வானளாவ உயர்ந்த தளிர் தழைத்த மரமும் அதன்மேல் பற்றிப் படர்ந்த
பொன்மயமான கொடியுமாகிய அவை இரண்டும் விரைவில் அலைப்புற்று
வளையும் தன்மைபோல், மனைவியாகிய மரியாள் தன் கணவனாகிய
சூசையோடு ஒருங்கு துன்பம் அடைந்தாள்.
 
               83
உருகிய துணைவனை யுருகி நோக்கினாள்
பெருகிய துயர்செயும் பிணிக ளேதையா
மருகிய வடிமையான் வனைவ தேதெனா
வருகியைந் தன்புற வறைந்தி றைஞ்சினாள்
 
உருகிய துணைவனை உருகி நோக்கினாள்:  
"பெருகிய துயர் செயும் பிணிகள் ஏது ஐயா?
மருகிய அடிமை யான் வனைவது ஏது?" எனா
அருகு இயைந்து, அன்புஉற அறைந்து இறைஞ்சினாள்.

     துன்பத்தால் உருகிய துணைவனைத் தானும் உருக்கத்தோடு
நோக்கினாள்: "ஐயா பெருகிய துயரத்தைத் தரும் துன்பங்களுக்குக் காரணம்
யாது? உன்னை அடுத்துள்ள அடிமையாகிய நான் செய்யத் தக்கது யாது?"
என்று அவன் அருகே சென்று, அன்பு பொருந்தக் கூறித் தொழுதாள்.

     'பிணிகள்' என்ற பன்மைக்கு 'ஏது' என்ற ஒருமைப் பயினிலை
பொருந்தாமையின், 'பிணிகளின் காரணம்' என்று பொருள் விரிக்க. காரணம்
இங்கு அறியாது வினவியதன்று; அவன் வாயினின்று விடையாக ஏதேனும்
வெளிப்படின், அதனைத் தொடர்ந்து, தக்கவாறு விளக்குதலை நோக்கமாகக்
கொண்டது. இவ்வினாவே சூசை பின்வரும் முடிவிற்கு வரக் காரணமாய்
அமைகின்றது.