பக்கம் எண் :

முதற் காண்டம்382

                 89
என்றலுந் திருவுள மின்ன தாகுமேல்
மன்றருந் துணரொடு வந்த பூங்கொடி
நின்றருந் துணைபெறா நீக்கிக் கானிடை
சென்றருந் தவமினி தென்று தேறினான்.
 
என்றலும், 'திரு உளம் இன்னது ஆகுமேல்,
மன்று அருந் துணரொடு வந்த பூங் கொடி
நின்று, அருந் துணை பெறா நீக்கி, கானிடை
சென்று அருந் தவம் இனிது' என்று தேறினான்

      என்றெல்லாம் சொல்லிய பின்னும், 'இறைவன் திருவுளமே
இப்படியிருக்குமாயின், மணமுள்ள அரிய பூங்கொத்தோடு மனைவியாக
என்னை வந்தடைந்த பூங்கொடி போன்ற மரியாள் இங்கே நிற்க, அவளது
அரிய துணையை நான் பெறாமல் நீக்கி, காட்டிற் சென்று அரிய தவத்தைக்
கைக் கொள்ளுதல் எனக்கு இனியது' என்று மனம் தேறினான்.

     மன்று - 'மன்றல்' என்ற சொல் கடை குறைந்து நின்றது துணர் -
பூங்கொத்து: இங்கு மண நாளில் தன் கைக்கோலில் மலர்ந்த பூக்களைக்
குறித்து நின்றது.
 
                        90
பிரிந்துளி துணைவியின் பிணிகண் டாலுள
முரிந்துளி துணிவிலா மெனமு டங்கொளி
யிரிந்துளி யிருண்டுறு மிரவி னாப்பணிற்
சரிந்துளி நீக்குப தணிற்கு ணித்தனன்
 
பிரிந்த உளி துணைவியின் துயர் கண்டால், உளம்
முரிந்த உளி துணிவு இல் ஆம் என, முடங்கு ஒளி
இரிந்த உளி இருண்டு உறும் இரவின் நாப்பண், இல்
சரிந்த உளி நீக்குப தனில் குணித்தனன்

     பிரிந்த போது தன் துணைவியின் துயரை நேரிற் காண நேர்ந்தால்,
மனம் அதனால் ஒடிந்தவிடத்துப் பிரிந்து செல்லத் துணிவு இல்லாது
போகும் என்று கருதி, சாயும் கதிரவனின் ஒளி நீங்கிய போது, உலகம்
இருண்டு கிடக்கும் இரவின் நடுப் பகுதியில், தன் இல்லாளும்
படுக்கையில் சாய்ந்து தூங்கும் போது நீங்கிச் செல்ல வேண்டுமென்று
தனக்குள் முடிவு கொண்டான்.