பக்கம் எண் :

முதற் காண்டம்412

     அகன்று - செய்து என்னும் வாய்ப்பாட்றி வினையெச்சம் செய என்னும்
வாய்ப்பாட்டுப் பொருளில் நின்றது. ஈந்தன - 'ஈந்த' என்ற பெயரெச்சம்
'அன்' சாரியை பெற்று நின்றது.
 
                         31
பொருக்கெனத் துணைவனைப் பொலியத் தூக்கினள்
பெருக்கெனப் பெருகுமின் புளம்பு ரண்டெனாக்
கருக்கனக் கண்மழை கழுமி வீழ்ந்தன
ளிருக்கண முடியுட னிரவி யாடையாள்.
 
பொருக்கெனத் துணைவனைப் பொலியத் தூக்கினாள்;
பெருக்கு எனப் பெருகும் இன்பு உளம் புரண்டு எனா,
கருக் கனக் கண் மழை கழுமி வீழ்ந்தனள்,
இருக் கண முடியுடன் இரவி ஆடையாள்.

     பெரிய விண்மீன்களால் ஆகிய முடியுடன் ஆதவனை ஆடையாக
அணிந்த மரியாள், பொலிவுடன், தன் துணைவனை விரைவாகத் தூக்கி
நிறுத்தினாள்; வெள்ளப் பெருக்கு போல் பெருகும் இன்பம் உள்ளத்துள்
அடங்காமல் புரண்டதுபோல், கரிய மேகம் போன்று கண்ணின் மழை
நிறைந்து கொட்டச் சூசையின் அடியில் வீழ்ந்தாள்.

     'பொருக்கென' என்றது, இதுவரை காலந்தாழ்த்தமை நினைவுக்கு வந்த
பதற்றத்தால் ஏற்பட்ட விரைவு சுட்டியது. 'பொலிய' என்றது, கடவுளின்
தாயாய் இருந்தும் கணவனுக்குக் காட்டிய மரியாதையும், கணவனோடு
சேர்த்தே மனைவி பெறும் பொலிவு பற்றிய உலகியல் மரபும் சுட்டி நின்றது.
'கருங் கனம்', இருங்கணம்' என்பன எதுகை இன்னோசைப் பொருட்டு
வலித்து நின்றன.
 
                         32
கதிர்ந்தெழு மன்பினான் காந்தை வீழ்குறா
வெதிர்ந்தெழு கெனமலர்க் கரங்கொ டேந்தினான்
விதிர்ந்தெழு தாழ்ச்சியால் மீண்டும் வீழ்ந்தனள்
பொதிர்ந்தெழு வரங்களாற் பொங்கு மாட்சியாள்.