பக்கம் எண் :

முதற் காண்டம்416

பதிந்து கிடந்த கருப்பம் கதிரொளியை வெளி விடுதலைக் கண்டான். கண்டு,
வாளால் குடைந்து அழுத்தியது போன்ற தன் வருத்தமெல்லாம் நீங்கப்
பெற்றான்.

     'கடைந்து அழுத்திய பீள் கதிர் பிலிற்றல்' என மாற்றிக் கூட்டுக.
 
                      38
வண்டுலாந் தாரினான் மலர்க்கண் வாயினா
லுண்டுலா மகிழ்வினை யுளம்பொ றாமையிற்
பண்டுலாம் வளமெலாம் பழித்த காந்தையைக்
கண்டுலா முரைமது கனியக் காலுவான்.
 
வண்டு உலாம் தாரினான் மலர்க் கண் வாயினால்
உண்டு, உலாம் மகிழ்வினை உளம் பொறாமையின்,
பண்டு உலாம் வளம் எலாம் பழித்த காந்தையைக்
கண்டு, உலாம் உரை மது கனியக் காலுவான்:

     வண்டுகள் மொய்க்கும் மலர்க் கொடியை உடைய சூசை தன் மலர்
போன்ற கண்ணாகிய வாயினால் அக்கதிரொளியை உண்டு, தன் உள்ளத்தில்
உலாவும் மகிழ்ச்சியை உள்ளம் அடக்கிக் கொள்ள இயலாமையால்,
பழங்காலந் தொட்டு அடியார் உள்ளங்களில் உலாவும் தெய்வ வரங்களின்
வளங்களையெல்லாம் பழித்து வென்ற தன் துணைவியை அணுகிக் கண்டு,
தேன் உலாவும் சொல்லைப் பின்வருமாறு இனிமையாகப் பொழிவான்:

     "மது உலாம் உரை" என மாற்றிக் கூட்டுக.
 
                 39
கூறருந் தகையுடை கோதை யார்தமுண்
மாறருந் திருவரம் வயங்கு மாட்சியாய்
சேறருந் தன்மையாற் சிறுவ னாகிய
பேறருங் கடவுளைத் தாங்கும் பீடமே.
 
"கூறு அருந் தகை உடை கோதையார் தமுள்
மாறு அருந் திரு வரம் வயங்கு மாட்சியாய்!
சேறு அருந் தன்மையால் சிறுவன் ஆகிய
பேறு அருங் கடவுளைத் தாங்கும் பீடமே!