பக்கம் எண் :

முதற் காண்டம்465

     சீர் - எழுத்துக்கள் முறைப்படி அமைந்த நேர் நிரை என்னும்
அசைகளால் ஆகிய செய்யுள் உறுப்பு. அடி - சீர்களால் ஆகிய
செய்யுள் உறுப்பு: இங்கு அடிகளால் ஆகிய செய்யுளைக் குறித்தது.
 
               6
மேலினார் வாசமே வீசுபூ விள்ளுமோர்
கோலினால் வந்தகோ டாதபூங் கொடியையென்
பாலினா னெய்தலாற் பானுலா நாடரே
யேலினால் மேவுசீ ராயதென் றெண்ணுவான்.
 
"மேலின் ஆர் வாசமே வீசு பூ விள்ளும் ஓர்
கோலினால் வந்த கோடாத பூங் கொடியை என்
பாலின் நான் எய்தலால், பான் உலாம் நாடரே,
ஏலினால் மேவு சீர் ஆயது" என்று எண்ணுவான்.

     "மேலுலகில் நுகரத் தக்க மணம் வீசும் பூக்கள் விரிந்த ஒரு
மலர்க்கோலோடு வந்து வாய்த்த கோட்டம் இல்லாத பூங்கொடி போன்ற
மரியாளை என் அருகில் மனைவியாக நான் அடைந்துள்ளமையால்,
பகலவன் உலாவும் நாட்டவராகிய வானவருமே, அது தமக்கு இயலுமாயின்
நன்று என்று விரும்பத் தக்க பெருமை எனக்குக் கிட்டியது" என்று
கருதுவான். எனவே, தொடர்ந்து கன்னி மரியாளைப் புகழ்ந்து தொழவும்
முற்படுகிறான்.

     'ஏலினால்' என்ற சொல் 'ஏலினால் நன்று' எனப் பொருள்பட்டது
இசையெச்சம் என்க. இவ்வாறு, வானவரும் தூய பொறாமை கொள்ளத்
தக்கது அவன் கொண்ட பெருமை என்பது கருத்து.

            கன்னி மரியாளைப் போற்றித் தொழுதல்
 
                7
மாட்சியா லோங்குபூ வாகையா னெண்ணருங்
காட்சியா லோங்கிமுற் கண்டயா வுந்தருஞ்
சூட்சியா லோங்குதன் றூயமா தேவியைத்
தாட்சியா லோங்குளத் தோர்ந்ததே சாற்றுவான்.