பக்கம் எண் :

முதற் காண்டம்47

''பட நாகம் தோல் உரித்த பான்மையின், கல் ஊடு உரிஞ்சி,
தட நாகம் தூங்கு அருவி தாவு அழகு ஆர் நாடு இதுவே:
தாவு அழகு ஆர் நாடு இதுவேல், தரங்கம் இலாது அருட்
பவ்வம் வாவு அழகு ஆர் திரு நிலைத்த வான் உலகம்
                                      நாடேமோ?

     ''படமுள்ள பாம்பு தன் தோலைச் சட்டையாகக் கழற்றிய
தன்மைபோல், கல்லின் ஊடே உராய்ந்து வந்து, பெரிய மலை மீது
தொங்கியதுபோல் அருவி பாய்ந்தோடும் அழகு நிறைந்த நாடு இதுவே
ஆகும்: அருவி பாய்ந்தோடும் அழகு நிறைந்த நாடு இது வென்றால்,
அலையே இல்லாமல் அருள் என்னும் கடல் பாய்ந்து பரக்கும் அழகு
நிறைந்து, செல்வமெல்லாம் நிலையாகக்கொண்ட வானுலகத்தைத் தேடாது
அமைவோமோ?''
  
                     61
பகைதீர்ந்து சண்பகத்தின் றண்ணிழற்கீழ்ப் பள்ளிவர
மிகைதீர்ந்து புறத்தெவர்க்கும் வேட்கைசெயு நாடிதுவே
வேட்கைசெயு நாடிதுவேல் விரிகாலத் திமிழ்குன்றா
வாட்கைசெயு நிலைமையுள வானுலக நாடேமோ.
 
''பகை தீர்ந்து, சண்பகத்தின் தண் நிழற் கீழ்ப் பள்ளி வர,
மிகை தீர்ந்து புறத்து எவர்க்கும் வேட்கை செயும் நாடு
                                       இதுவே:
வேட்கை செயும் நாடு இதுவேல், விரி காலத்து இமிழ்
                                       குன்றா
வாட்கை செயும் நிலைமை உள வான் உலகம் நாடேமோ?

     ''பகையும் தீர்ந்து, துன்பமும் நீங்கப் பெற்று சண்பக மரத்தின்
குளிர்ந்த நிழலின் கீழ் உறக்கம் கொள்ள, வெளி நாட்டிலுள்ள யாவர்க்கும்
ஆசையைத் தூண்டும் நாடு இதுவே ஆகும்: அவ்வாறு ஆசையைத் தூண்டும்
நாடு இதுவென்றால், முடிவில்லாது விரிந்த காலமெல்லாம் இன்பம் குறையாத
வாழ்க்கையைத் தரும் நிலைபேறு கொண்ட வானுலகத்தைத் தேடாது
அமைவோமோ?''

     
'வேட்கை' என்றது, வெளிநாட்டார் அங்கு வந்து வாழத் துடிக்கும்
ஆசை. வாட்கை - 'வாழ்க்கை' என்ற சொல் எதுகை நோக்கித் திரிந்தது.
'பள்ளி' என்ற படுக்கையின் பெயர் அதனிற் கொள்ளும் உறக்கத்திற்கு
ஆகுபெயராய் அமைந்தது.