பக்கம் எண் :

முதற் காண்டம்473

                  18
காயா மரமே யல்லாற் காய்த்த சினைகள் நிறுவா
தீயார் செல்வத் தல்லாற் றெருளோர் செருக்கெய் துவரோ
பாயா நெகிழும் பணியா தனவில் பணித்த சரமே
வீயா துயரும் வளிநேர் வெகுளா வளையுந் தருவே.
 
காயா மரமே அல்லால், காய்த்த சினைகள் நிறுவா.
தீயார் செல்வத்து அல்லால், தெருளோர் செருக்கு எய்துவரோ?
பாயா நெகிழும் பணியாதன வில் பணித்த சரமே.
வீயாது உயரும் வளி நேர் வெகுளா வளையும் தருவே.

     காய்க்காத மரக் கிளைகள் நிமிருமே அல்லாமல், காய்த்த மரக்
கிளைகள் நிமிர்ந்து நில்லா. செல்வத்தைக் கண்டு தீயோர் செருக்குக்
கொள்வாரே அல்லாமல், தெளிந்த அறிவுடையோர் செருக்குக் கொள்வரோ?
வளையாத வில் ஏவிய அம்பு குறியை நோக்கிப் பாயாமல் தவறும். காற்றின்
முன் சினவாமல் வளைந்து கொடுக்கும் மரமே அழியாமல், அது நீங்கியதும்
நிமிர்ந்து நிற்கும்.

     இப்பாடல் பணியாமையின் தீங்கும் பணிவதன் நலமும் புலப்படப்
பிறிது கூறிப் பெற வைத்தலால் பிறிது மொழிதலணி.

 
                     19
சாலோர் பொருளா னிறைபொற் கலமே தருமோர் தொனியோ
நூலோ ரியக்கம் பேசார் நுண்மா ணுழைகின் றறங்கொள்
மேலோ ருகப்பே மேவார் மேவார்த் தொடர்தந் நிழலைப்
போலோ ரிடத்துந் தேடாப் பொழுதே தொடரும் புகழே,
 
சால் ஓர் பொருளால் நிறை பொற் கலமே தரும் ஓர் தொனியோ?
நூலோர் இயக்கம் பேசார், நுண் மாண் நுழைகின்ற அறம் கொள்
மேலோர் உகப்பே மேவார் மேவார்த் தொடர் தம் நிழலைப்
போல், ஓர் இடத்தும் தேடாப் பொழுதே தொடரும் புகழே.