பக்கம் எண் :

முதற் காண்டம்534

 
ஏற்றுவான், அன்பின் உள் உருகி, இன்பு உற;
தூற்றுவான் இரு விழி சொரிந்த மாரியை;
போற்றுவான். அவற்கு மேல் பொழி வரத் தொகை
சாற்றுவான், உணர்குவான் மக்கள் தன்மையோ?

     சூசை, அன்பினால் உள்ளம் உருகி, இன்புற்றுக் குழந்தை நாதனைப்
போற்றுவான்; தன் இரு கண்கள் சொரிந்த கண்ணீர் மழையைப் பொழிவான்.
மேலும் மேலும் போற்றிக்கொண்டே இருப்பான். வானினின்று அவன் மீது
பொழிந்த வரங்களின் தொகையைச் சொல்லவும் உணரவும் மக்களால்
இயல்வதோ?

     சாற்றுவான், உணர்குவான் - இரண்டும் 'வான்' ஈற்று எதிர்கால
வினையெச்சங்கள்.

               வறுமையே திருமகன் விருப்பம்

          - விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா.

 
                    118
பண்ணெனச் சொன்ன தீஞ்சொற் பயனுணர்ந் தரிய வன்பாற்
கண்ணெனத் தன்னைக் காக்குங் காவலன் விருப்பங் கண்டு
விண்ணெனத் தரணி கவ்வும் விரிந்தமா கருணை வல்லாள்
நூண்ணென முறுவற் கோட்டி நுதல்வருங் கனிசொற்
                                      கால்வாள்.
 
பண் எனச் சொன்ன தீம் சொல் பயன் உணர்ந்து, அரிய
                                        அன்பால்
கண் எனத் தன்னைக் காக்கும் காவலன், விருப்பம் கண்டு,
விண் எனத் தரணி கவ்வும் விரிந்த மா கருணை வல்லாள்,
நுண் என முறுவல் கோட்டி நுதல்வு அருங் கனி சொல்
                                        சொல்வாள்:

     வானம் போலப் பூமியிலுள்ள மக்களையெல்லாம் தழுவிக்
கொண்டிருக்கும் மிக்க கருணையில் வல்லவளாகிய மரியாள், அரிய
அன்போடு தன்னைக் கண் போல் காக்கும் காவலனாகிய சூசை இசை
போலச் சொன்ன இனிய சொல்லின் கருத்தை உணர்ந்து, அவன்
ஆசையைக் கண்டு, நுண்ணிய புன்முறுவல் நெளியக் கருதுதற்கரிய
கனிவோடு இச் சொற்களைச் சொல்வாள்;

     'தரணி' இடவாகு பெயராய் உலக மக்களைக் குறித்தது: விருப்பம்
- கடவுள் மகனை அவனுக்கு உரிய மேன்மையோடு வரவேற்க
வேண்டுமென்ற ஆசை.