பக்கம் எண் :

முதற் காண்டம்55

                       73
ஆற்றவ ருந்தில நல்லற மல்லது மல்லவை யில்லையெனா
மாற்றவ ருந்துய ரில்லது முண்மயல் மல்கலு மில்லையெனா
வேற்றவ ருந்துதி யொல்லொலி யல்லது மெள்ளது                                    மில்லையெனாச்
சாற்றவ ருந்தினு மொல்லும ருந்தமி ழுஞ்சம மல்லதுவே.
 
ஆற்ற வருந்து இல நல் அறம் அல்லதும் அல்லவை இல்லை                                           எனா,
மாற்ற அருந் துயர் இல்லதும் உள் மயல் மல்கலும் இல்லை                                           எனா,
ஏற்ற அருந் துதி ஒல் ஒலி அல்லதும் எள் அதும் இல்லை                                           எனாச்
சாற்ற வருந்தினும், ஒல்லும் அருந் தமிழும் சமம் அல்லதுவே.

     அந்நாட்டில், செய்வதற்கு வருத்தம் தராத நல்ல புண்ணியங்களே
உள்ளன அல்லாமல் பாவங்களே இல்லை என்றும், மாற்றுவதற்கு அரிய
துயரங்களே இல்லாதிருத்தலோடு உள்ளத்தில் மயக்கம் மிகுதலும் இல்லை
எனவும், ஏற்ற அரிய புகழ் ஒல்லென ஒலிக்கும் ஒலியே அல்லாமல்
இகழும் ஒலி என்பதே இல்லை எனவும், இவை போன்றவற்றை முற்றச்
சொல்ல வருந்தி முயன்றாலும், எதைச் சொல்லவும் இயலும் அரிய திறம்
வாய்ந்த தமிழும் இதைச் சொல்வதற்குச் சமமாக நின்று ஈடு கொடுக்கக்
கூடியதன்று.

     தமிழும் ஈடு கொடுக்க இயலாதென்றால், பிற மொழிகளைப் பற்றிச்
சொல்லவே வேண்டியதில்லை என்பதனை 'அருந் தமிழும், என்ற
தொடரிலுள்ள உயர்வு சிறப்பு உம்மை புலப்படுத்தும். அருந்தமிழுக்கு
'ஒல்லும் என்ற அடைமொழியும் அச்சிறப்பே சுட்டி நின்றது.

                   மக்கள் நலம்

     -மா, கூவிளம், கூவிளம், கூவிளம்

 
               74
பூம லிந்தபொ ருத்தரும் பொற்பெலாம்
பூம லிந்துபொ ருந்திய பொற்பினால்
நாம லிந்தந சைக்குயர் நாடினு
நாம லித்தவி சைக்குயர் நாடதே