பக்கம் எண் :

முதற் காண்டம்56

பூ மலிந்த பொருத்து அரும் பொற்பு எலாம்,
பூ மலிந்து, பொருத்திய பொற்பினால்,
நாம் மலிந்து நசைக்கு உயர் நாடினும்,
நா மலிந்த இசைக்கு உயர் நாடு அதே.

     பூக்கள் நாடெங்கும் நிறைந்து, பூவுலகெங்கும் நிறைந்துள்ள ஒன்று
கூட்டுதற்கு அரிய அழகுக ளெல்லாம் தன்னிடத்துப் பொருந்தியுள்ள
மேன்மையினால், நாம் நம்மிடம் நிறைந்துள்ள ஆசைக்கும் உயர்வாகவே
ஆராய்ந்து புகழ முற்படினும், நம் நாவில் நிறைந்துள்ள புகழைக்
காட்டிலும் உயர்வுள்ள நாடு அச்சூதேய நாடு.
  
                75
வண்டு ரைத்தும லர்ந்தலர்ப் புண்ணலால்
வண்டு ரைத்தும லர்ந்தகப் புண்ணிலால்
வண்டு ரைத்தும யக்கில நாடலை
வண்டு ரைத்தும யக்குறு நாடதே.
 
வண்டு உரைத்து மலர்ந்து அலர்ப் புண் அலால்,
வண்டு உரைத்து மலர்ந்து அகப் புண் இலால்,
வண்டு உரைத்து மயக்கு இல நாடு, அலை
வண்டு உரைத்து மயக்கு உறும் நாடு அதே.

     வண்டுகள் உராய்வதனால் மலர்ந்து மலர்களிடையே காணப்படும்
புண்களே அல்லாமல், அம்பு துளைப்பதனால் திறந்து மார்புப் புண்படுதல்
இல்லாமையால், குற்றம் கூறி மயக்கம் அடைவதற்கு இடமில்லாத நாடு
அது. கடலிலுள்ள சங்குகள் ஒலித்து இன்ப மயக்கம் தரும் நாடும் அதுவே.
 

             76
மாலை மாறிவ யங்கிய மாமதி
மாலை மாறிவ யங்கிய மாதர்கள்
மாலை மாறிய கற்புடை மார்புறை
மாலை மாறிய கற்புடை மாண்பரோ.
 
மாலை மாறி வயங்கிய மா மதி
மாலை மாறி வயங்கிய மாதர்கள்
மாலை மாறிய கற்புடை மார்பு உறை
மாலை மாறிய கற்பு உடை மாண்பர் ஓ.