பக்கம் எண் :

முதற் காண்டம்561

     மரக் கொம்புகளில் நிறைந்த குயில்கள் அமர்ந்து கூவவும், மயில்கள்
எழுச்சி கொண்டு ஆடவும், பசுமையான சிறகுள்ள தேனீக்களோடு தும்பி
வண்டுகளும் சேர்ந்து பாடவும், தூய அன்னம் மரியாளின் நடையைக்
கண்டு நாணவுமாக, ஆண்களிற் சிறந்த சூசை மாதருட் சிறந்த மரியாளோடு
நன்மை வாய்ந்த அவ்வழியாக நடந்து போனான்.

     அனம் - 'அன்னம்' என்பதன் இடைக்குறை.

              காந்தரியைப் பிடித்த காமப்பேய்
 
             27
தூமஞ் சூடிய தூய்துகி லேந்துபு
தாமஞ் சூடிய தாரொடு பூண்மலி
காமஞ் சூடிய காந்தரி யென்றொரு
நாமஞ் சூடிய நாரியைக் கண்டுளார்.
 
தூமம் சூடிய தூய் துகில் எந்துபு,
தாமம் சூடிய தாரொடு பூண் மலி,
காமம் சூடிய காந்தரி என்று ஒரு
நாமம் சூடிய நாரியைக் கண்டு உளார்.

     அகிற் புகை ஊட்டிய தூய ஆடையை அணிந்துகொண்டு, தலையில்
சூடிய பூமாலையோடு மணி மாலையும் பிற அணிகளும் உடலெங்கும்
நிறைந்து கிடக்க, மனத்தில் காம இச்சையை அணிந்தவளும் காந்தரி
என்று ஒரு பெயரை அணிந்தவளுமாகிய ஒரு பெண்ணை அவ்விருவரும்
காண்பாராயினர்.

     'தாமம்' பூமாலை எனவே, 'தார்' மணி மாலை எனக் கொள்க,
 
              28
வெஞ்சி னக்கரி மேய்ந்துகும் வெள்ளிலோ
நஞ்சின் முற்றிய காஞ்சிர மோநகை
விஞ்சி வெற்றெழிற் பாவையின் வேடமோ
நெஞ்சி னற்றகை நீத்தெழி னாரியே.