பக்கம் எண் :

முதற் காண்டம்564

            32
பாற்க லந்தன நஞ்சு பருகினாற்
போற்க லந்தன வின்பொடு புன்கணை
மாற்க லந்தம னத்துண மைந்தர்சூழ்
வேற்க லந்தகண் வெஃகிநெ ருங்கினார்.
 
பால் கலந்தன நஞ்சு பருகினாற்
போல், கலந்தன இன்பொடு புன்கணை
மால் கலந்த மனத்து உண, மைந்தர் சூழ்
வேல் கலந்த கண் வெஃகி நெருங்கினார்.

     பாலோடு கலந்த நஞ்சைப் பருகினாற்போல, காம இன்பத்தோடு
கலந்த பாவமாகிய துன்பத்தையும் மயக்கம் கலந்த தம் மனத்தால்
உண்ணும் பொருட்டு, வேலைப் போன்ற அவள் கண் அழகை விரும்பி,
ஆடவர் அவளைச் சுற்றிலும் நெருங்கி நின்றனர்.

     கலந்தன - கலந்த; இடையே 'அன்' சாரியை பெற்ற பெயரெச்சம்.
 
              33
காமத் தீயெழ வோர்நகை காட்டினள்
வீமத் தீயெழ வெஞ்சினங் காட்டுவாள்
தூமத் தீயெழத் தோன்றிருள் போன்றுகண்
வாமத் தீயெழ வுண்ணிசி மல்குமால்.
 
காமத் தீ எழ ஒர் நகை காட்டினள்,
வீமத் தீ எழ வெஞ் சினம் காட்டுவாள்;
தூமத் தீ எழத் தோன்று இருள் போன்று, கண்
வாமத் தீ எழ, உள் நிசி மல்கும் ஆல்.

     கண்டவர் மனத்தில் காம நெருப்பு எழுமாறு ஒரு புன் முறுவலை
முதலில் காட்டி நின்ற அவளே, பின் அச்சம் என்னும் நெருப்பு எழுமாறு
கொடுஞ் சினத்தைக் காட்டி நிற்பாள்; புகையைத் தரும் நெருப்பின்மேல்
எழுந்து மூடித் தோன்றும் இருள் போன்று, அவள் கண் அழகால் காமத்
தீ எழ, அவர் மனத்தில் இருளே பெருகும்.

     'ஆல்' அசைநிலை.