பக்கம் எண் :

முதற் காண்டம்646

இடத்து யாவர் என்பன, குற்றுகரப் புணர்ச்சியில் யகரம் வா உகரம்
இகரமாகத் திரிந்து, மடத்தி யாது. இடத்தியாவர் என நின்றன.

 
            20
"ஆவ தேமுன ராயது போலறிந்
தீவ தேநசை பின்றவ ளித்திடுங்
கோவ தேமிசை யாள்தனிக் கோலினா
னோவ தேயினி தென்றுதித் தான்கொலோ.
 
"ஆவதே முனர் ஆயது போல் அறிந்து,
ஈவதே நசை பின்ற அளித்திடும்
கோ அதே மிசை ஆள் தனிக் கோலினான்,
நோவதே இனிது என்று, உதித்தான் கொலோ?

     "நடக்கவிருப்பதனை முன்னர் நடந்தது போல் அறிந்து, மனிதர்க்கு
ஈவதென்றால் அவர் தம் ஆசை பிற்படுமாறு மிகுதியாகத் தருபவனாய்,
வானத்தின் மீது இருந்து தனியரசு செலுத்தும் செங்கோலை உடைய
ஆண்டவன், துன்புறுவதே தனக்கு இனிதென்று கருதி, இவ்வெளிமைக்
கோலத்திற் பிறந்தானோ?

     'கோவதே' என்ற இடத்து 'அது' பகுதிப்பொருள் விகுதி.
 
              21
"கொல்லும் வேலொடுங் கூர்நெடும் வாளொடும்
வில்லும் வாளியு மாழியும் வில்செய
வொல்லு மாழியு ருட்டிடக் கோன்றுணை
செல்லும் வீரவெஞ் சேனையி லாயதேன்.
 
"கொல்லும் வேலொடும் கூர் நெடும் வாளொடும்
வில்லும் வாளியும் ஆழியும் வில் செய,
ஒல்லும் ஆழி உருட்டிடக் கோன் துணை
செல்லும் வீர வெஞ் சேனை இல் ஆயது ஏன்?

     கொல்லும் வேலோடும் கூர்மையான நெடிய வாளோடும் வில்லும்
அம்பும் சக்கரமும் ஆகிய படைக்கலன்கள் ஒளிர, தனக்கு உரித்தாகிய
ஆணைச் சக்கரத்தை உருட்டி ஆட்சி செய்ய ஓர் அரசனுக்குத்
துணையாகச் செல்லக்கூடிய வீரமுள்ள கொடிய சேனை இவனுக்கு
இல்லாது போனது ஏன்?