பக்கம் எண் :

முதற் காண்டம்652

"அன்னை தந்தை இலான், அறை நூற் படி,
என்னை இங்கு அளித்தோன் வரும் எல்வையின்,
மின்னை ஒன்றிய வேடம் எடுத்து, அவன்
தன்னை யாவரும் தாழ இறைஞ்சுவார்.

     "வேத நூலிற் சொல்லியுள்ளபடி, தாயும் தந்தையும் இல்லாமல்
தானாய் விளங்கும் ஆண்டவன், என் போன்ற மனிதரை மீட்டுக்
காப்பவனாய் இவ்வுலகில் வந்து தோன்றும் காலத்தில், மின்னல் போன்ற
வேடம் எடுத்து வரவே, அவனை யாவரும் தாழ்ந்து வணங்குவர்.

     அளித்தோன் - அளிப்பவன்: உறுதி பற்றி வந்த கால வழுவமைதி.  

              32
அஞ்சு வாரவன் முன்னுல காள்பவ
ரெஞ்சு வாரவ னையிறைஞ் சாரென
விஞ்சு மாரண மாகவி ளம்பினார்
துஞ்சு மாதவ ரேயெனச் சொல்லினாள்.
 
"அஞ்சுவார் அவன் முன் உலகு ஆள்பவர்;
எஞ்சுவார் அவனை இறைஞ்சுவார்" என
விஞ்சும் ஆரணம் ஆக விளம்பினார்
துஞ்சு மா தவரே? எனச் சொல்லினாள்.

     " இவ்வுலகத்தை ஆளும் அரசரெல்லாம் அவன்முன் அஞ்சி
நடுங்குவரென்றும், அவனை வணங்காதவர் கெட்டொழிவரென்றும்,
மறைந்துவிட்ட பெருந்தவத்தோர் மேலான வேதவாக்காகச்
சொல்லியுள்ளார்களே?" என்றாள்.
 
                33
சொல்லக் கேட்டனள் தொன்மொழித் தன்மையும்
வெல்லக் கேட்பரும் வெஞ்சினத் தெல்லைநா
ளொல்லக் கேட்டன ருட்குற வாவதைப்
புல்லக் கேட்கிலி யான்புகழ் வேனென்றாள்.