பக்கம் எண் :

முதற் காண்டம்655

                  36
மண்கனியப் பொன் பொழிந்த மழையொத் தார்வம்
     வழங்கவுரிப் பொழுதெனவின் றிறங்கிச் சேயாய்க்
கண்கனியப் பொற்கோலா லரிதிற் றீட்டிக்
     கதிர்தவழு மோவியநல் லுயிர்பெற் றன்ன
விண்கனியக் கவின்பூண்ட வடிவஞ் சூட்டி
     விழைவியற்றுங் குழவியென விங்கண் டோன்றிப்
புண்கனியக் குளிர்ந்தாற்று மருந்து போன்றான்
     புலவரெலாம் வருந்தினும்தம் புகழின் மிக்கோன்.
 
"மண் கனியப் பொன் பொழிந்த மழை ஒத்து, ஆர்வம்
   வழங்க உரிப் பொழுது என இன்று இறங்கிச் சேய் ஆய்,
கண் கனியப் பொற் கோலால் அரிதின் தீட்டிக்
   கதிர் தவழும் ஓவியம் நல் உயிர் பெற்று அன்ன,
விண் கனியக் கவின் பூண்ட வடிவம் சூட்டி,
   விழைவு இயற்றும் குழவி என இங்கண் தோன்றி,
புன் கனியக் குளிர்ந்து ஆற்றும் மருந்து போன்றான்,
   புலவர் எலாம் வருந்தினும், தம் புகழின் மிக்கோன்.

     "புலவரெல்லாம் வருந்தி முயன்று கூற முற்படினும், அவர் தம்
புகழுரைக்கும் மேலாக உயர்ந்து நிற்கும் ஆண்டவன், இம் மண்ணுலகம்
இன்புறப் பொழிந்த பொன் மழை போல், தன் அன்பை வழங்க உரிய
காலம் இது என்று வானுலகினின்று இறங்கி ஒரு மகனாய் வுந்து, கண்
மகிழுமாறு பொன் மயமான தூரிகையால் அரிய முறையாய்த் தீட்டிக்
கதிரொளி பரப்பும் ஒரு சித்திரம் நல்ல உயிரும் பெற்ற தன்மை போல,
விண்ணுலகமும் இன்புறத்தக்க அழகு பொருந்திய வடிவம் தாங்கி,
எல்லோருக்கும் விருப்பத்தைத் தூண்டும் குழந்தையாக இவ்வுலகில்
வந்து தோன்றி, பாவமாகிய புண்ணைக் கனிவோடு குளிர்வித்து ஆற்றும்
மருந்து போல் தோன்றியுள்ளான்.
 
                 37
அழுதார்ந்த துயர்க்கரத்திற் பிறந்து கைக்கு
     மரந்தையின்பா லருந்திவளர்ந் தருள்வ ளர்த்த
பொழுதார்ந்த வஞ்சகத்தார் பகைசெய் தார்ப்பப்
     பொறையேராய்ப் பூட்டிச்செம் புனற்சே றாக
வுழுதார்ந்த வார்வவிதை வித்திப் பின்னு
     முரியவர நீரிறைத்து விளைந்த வின்பம்
வழுதார்ந்த வையகத்தா ருய்தற் கீவான்
     மணிக்கலத்தூ டமுதேந்து மருள்மொய் மார்போன்.