பக்கம் எண் :

முதற் காண்டம்67

வாள் போன்ற பல்லாய்த் தோன்றவும், ஊனைச் சொரியும் வாயை விரித்துக்
கொண்டும், கண்ணினின்று தீச் சொரியவும் அவ்வகழியைக் கலக்கிய
முதலைக் கூட்டம் தோன்றும்.

     அகழியை ஆழப்படுத்திய போது நரகம் வரையில் எட்டவே,
பேயினம் அகழியில் வந்து முதலையாக உலாவத் தொடங்கியது என்பது
குறிப்பு.
  
                      11
ஓவலிற் றெழிற்பூ மாதே யுவந்தநாட் செறிந்த கற்றை
தூவலிற் பகல்செய் பைம்பொற் சுடர்முடி சூழ்ந்த தென்ன
வாவலிற் கிளர்நன் றுட்கொண் டடிகடம் மனத்தைக் காக்குங்
காவலிற் கதுவி டாத கனகமா மதிளின் றோற்றம்.
 
ஓவல் இற்று எழில் பூ மாதே உவந்த நாள், செறிந்த கற்றை
தூவலின் பகல் செய் பைம் பொன் சுடர் முடி சூழ்ந்தது என்ன,
ஆவலின் கிளர் நன்று உட் கொண்டு அடிகள் தம் மனத்தைக்
                                     
      காக்கும்
காவலின், கது விடாத கனக மா மதிளின் தோற்றம்.

     முனிவர்கள் ஆசையினால் கிளர்ந்து எழும் நன்மையை மட்டும்
உட்கொண்டு தீமைக்கு இடந் தராது தம் மனத்தைக் கட்டிக் காக்கும்
காவலைப் போல, பகைவரை நுழைய விடாத பொன் மயமான பெரிய
மதிலின் தோற்றம், அழகிய நில மடந்தை தான் ஓய்வில்லாது மகிழ்ந்த
ஒரு நாள், செறிந்த கதிர்த் திரளைத் தூவுவதனால் ஒளியைப் பரப்பும்
பசும் பொன்னாலாகிய ஒளி முடியை அணிந்துகொண்டது போலத்
தோன்றும்.

     
முனிவர்கள் ஆசையிடையே நன்மையைக் கொண்டு தீமைக்கு இடந்
தராதது போல மதிலும் தம்மவர்க்கு இடந் தந்து பகைவரைத் தடுத்து
நிறுத்தும் என்பது கருத்து.
      
                        12
காரணி பசும்பொற் குன்றின் காட்சிபோன் மதிளைச் சூழ்ந்து
சீரணி யனைத்துஞ் சேர்த்த செழுநகர் திறந்த வாயில்
பேரணி யெவையு மீட்டிப் பின்னவை யுவப்பிற் காட்டப்
பாரணிப் பேழை யாரும் பயன்படத் திறந்த போன்றே.