பக்கம் எண் :

முதற் காண்டம்701

                       109
குழலெடுத்து மாகதர்தேன் படப்பாடிப் பல்லியங்கார்க் குரலி
                                    னார்ப்ப
நிழலெடுத்துச் சுடரிமைக்கு முடிவேந்தர் நெட்டிடைபன் னெ
                                    றிக ணீக்கிச்
சுழலெடுத்து முகிற்றலையீர் கொடிநகரைக் கடந்தேகிச்
                                    சோகி னங்க
ளழலெடுத்துச் செய்ததுய ராற்றிறையோ னுறைந்தவிட
                               மடைந்தா ரன்றோ.
 
குழல் எடுத்து மாகதர் தேன் படப் பாடி, பல் இயம் கார்க்
                                  குரலின் ஆர்ப்ப,
நிழல் எடுத்துச் சுடர் இமைக்கும் முடி வேந்தர் நெட்டு இடை
                                  பல் நெறிகள் நீக்கி,
சுழல் எடுத்து முகில் தலை ஈர் கொடி நகரைக் கடந்து ஏகி,
                                  சோகு இனங்கள்
அழல் எடுத்துச் செய்த துயர் ஆற்று இறையோன் உறைந்த இடம்
                                  அடைந்தார் அன்றோ.

     புகழ் பாடுவோர் புல்லாங்குழல் இசையோடு கூடித் தேனிலும்
இனிதாகப் பாடவும், பல இசைக்கருவிகள் அடித்துப் பொழியும் மழைக்
குரல் போல் முழங்கவும், சுடர் ஒளிகொண்டு மின்னும் முடியை அணிந்த
மூவரசரும் நெடுந்தூரத்துப் பல வழிகளையும் கடந்து, மேகத்தின்
தலையைச் சுழன்ற வண்ணமாய் அறுக்கும் கொடியை உடைய எருசலேம்
நகரையும் கடந்து சென்று, பேய்க் கூட்டங்கள் நெருப்பைப்போல் செய்த
துயரத்தை ஆற்றும் ஆண்டவன் தங்கியிருந்த இடத்தை அடைந்தனர்.

     'அன்றோ' அசைநிலை. நெடுமை + இடை - நெட்டிடை. இடையே
எரோது மன்னனை மூவரசர் சந்தித்த செய்தி, 25வது, குழவிகள்
வதைப்படலம் காண்க.
 
                      110
மந்திரமேற் றூயொளிகால் வாகையென வங்கணுடு வதிந்து
                                    நிற்ப
வந்தரமே லவர்வணங்கு மரசர்பிரான் விலங்கினங்க ளடையு
                                    மன்ன
கந்தரமே தெரிந்ததெனக் கண்டுள த்தில் வியப்பினொடு
                                    களித்த மூவ
ரெந்திரமே பொருக்கெனநின் றிழிந்தருத்தி யெழுந்துவந்துள்
                               ளிறைஞ்சிப் புக்கார்.