பக்கம் எண் :

முதற் காண்டம்702

மந்திர மேல் தூய் ஒளி கால் வாகை என, அங்கண் உடு
                       வதிந்து நிற்ப,
அந்தர மேலவர் வணங்கும் அரசர் பிரான் விலங்கு
                       இனங்கள் அடையும் அன்ன
கந்தரமே தெரிந்தது எனக் கண்டு, உளத்தில் வியப்பினொடு
                       களித்த மூவர்
எந்திரமே பொருக்கென நின்று இழிந்து, அருத்தி எழுந்து
                       உவந்து, உள் இறைஞ்சிப் புக்கார்.

     மாளிகையின் மேல் ஒளியைப் பொழியும் கொடி போல்,
விண்மீன் அங்கே தங்கிநிற்கவே, வானிலுள்ள வானவரும் வணங்கும்
அரசர்க்கரசனாகிய ஆண்டவன் விலங்குகள் அடையும் அந்தக் குகையையே
தனக்கென்று தெரிந்து கொண்டானென்று கண்டு, உள்ளத்தில் வியப்போடு
மகிழ்ச்சி கொண்ட அம்மூவரும் தேரினின்று பொருக்கென இறங்கி, அன்பு
மேலோங்க மகிழ்ந்து, வணங்கிய வண்ணமாய் உள்ளே புகுந்தனர்.
 
                    111
அழிவின்றிக் கன்னித்தா யரிதிலவண் டிருமகவீன் றளித்த
                               வாறு
மிழிவின்றி யுலகளிப்ப விருதுவத்தை யொன்றுபட
                               விசைத்த வாறும்
பழியின்றி யுருக்கொடுபற் பலவும்பர் புடைபுடைதாட்
                               பணிந்த வாறும்
விழியின்றி யிறையீந்த மேதையினா லறிந்துளத்து வியப்புற்
                               றாரே.
 
அழிவு இன்றிக் கன்னித் தாய் அரிதில் அவண் திரு மகவு
                              ஈன்று அளித்த ஆறும்,
இழிவு இன்றி உலகு அளிப்ப இருதுவத்தை ஒன்றுபட இசைத்த
                              ஆறும்,
பழி இன்றி உருக் கொடு பற்பல உம்பர் புடை புடை தாள்
                              பணிந்த ஆறும்,
விழி இன்றி, இறை ஈந்த மேதையினால் அறிந்து உளத்து
                              வியப்பு உற்றாரே.

     அங்கு, கன்னித் தாயாகிய மரியாள் அரியதொரு முறையால் தன்
கன்னிமைக்கு அழிவு இல்லாமல் திருமகனைப் பெற்றுத் தந்த விதமும்,
குறையின்றி இவ்வுலகத்தை மீட்டுக் காக்கத் தெய்வத்துவம் மனிதத்துவமாகிய
இரு வகை இயல்புகளையும் அத்திரு மகன் ஒன்றாக இணைத்துக் கொண்ட
விதமும், பழிப்பிற்கு இடமின்றி உடலுருவம் எடுத்துக் கொண்டு பற்பல
வானவர் இரு பக்கமும் சூழ நின்று அத்திருமகனின் அடிகளை வணங்கிய