பக்கம் எண் :

முதற் காண்டம்73

தேனொடும் ஞிமிறொடும் செறிந்த தும்பிகள்,
வானொடு வழங்கிய மலர் செய் தோரணம்
கானொடு வழிந்த தேன் களித்து மேய்ந்த பின்
ஆனொடும் இசையொடும் ஊஞ்சல் ஆடும் ஆல்.

     தேனீக்களோடும் கருவண்டுகளோடும் கூடிக் கொண்ட தும்பி
வண்டுகள், வானத்தை எட்டிய மலராலாகிய தோரணங்களிலிருந்து
வாசனையோடு வடிந்த தேனைக் களிப்போடு பருகிய பின், இனிமையோடும்
பாட்டோடும் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும்.

     தேன், ஞிமிறு, தும்பி என்பன தேனீயின் பல இனங்கள்.
 
                 22
கரியினங் கரியொடுங் கலினம் பூண்டுபாய்
பரியினம் பரியொடும் பரியைப் பூட்டிய
வெரியின மணிசெறி யேமத் தேர்களு
நெரியின நெருங்குப நெரிந்த வாயெலாம்.
 
கரி இனம் கரியொடும்; கலினம் பூண்டு பாய்
பரி இனம் பரியோடும், பரியைப் பூட்டிய
எரி இன மணி செறி ஏமத் தேர்களும்
நெரியின நெருங்குப நெரிந்த வாய் எலாம்.

     யானைக் கூட்டம் யானைகளோடும், கடிவாளம் பூண்டு பாயும்
குதிரைக் கூட்டம் குதிரைகளோடும், குதிரைகளைப் பூட்டிய ஒளி
பொருந்திய பல இன மணிகள் பொருந்திய பொன்னாலான தேர்களும்
சென்ற இடமெல்லாம் ஒன்றையொன்று நெரித்த வண்ணமாய் நெருங்கிக்
கிடக்கும்.
   
                23
பேரொலி முரசொலி பிளிர்ந்த சங்கொலி,
தேரொலி மதமழை சிதறி யானைக
ளூரொலி யிவுளிக ளொலிம யங்கிமேற்
காரொலி கடலொலி கலங்க விம்முமால்.
 
பேர் ஒலி, முரசு ஒலி, பிளிர்ந்த சங்கு ஒலி,
தேர் ஒலி, மத மழை சிதறி யானைகள்
ஊர் ஒலி, இவுளிகள் ஒலி மயங்கி, மேல்
கார் ஒலி கடல் ஒலி கலங்க விம்மும் ஆல்.