பக்கம் எண் :

முதற் காண்டம்83

பொன் பொதிர் வயிரக் கால் மிசை பவளப் போதிகை
                          பொருத்தியது ஒரு பால்,
வில் பொதிர் துகிர்க் கால் மரகத மணியால் விளங்கிய
                          போதிகை ஒரு பால்,
எல் பொதிர் நிதிக் கால் அமைந்த போதிகையாய் இன
                          மணி கிடத்தியது ஒரு பால்,
சொல் பொதிர் மின்னின் மின்னி முன் நிரையின் செறிந்த
                          பல் மண்டப நிலையே.

      மேகத்தில் மிகுந்தெழுந்த மின்னல் போல் மின்னி, ஆலயத்தின்
முன் வரிசையாய்ச் செறிந்து கிடந்த பல மண்டபங்களைப் பற்றிச்
சொல்வதாயின், அழகு மிகுந்த வைரத் தூணின் மீது பவளப் போதிகை
பொருத்திய மண்டபம் ஒரு பக்கம். ஒளிமிகுந்த பவளத் தூணின் மீது
மரகதம் என்னும் மாணிக்கத்தால் விளக்கம் பெற்ற போதிகை கொண்ட
மண்டபம் மற்றொரு பக்கம். ஒளி மிகுந்த பொற்றூணின் மீது அமைந்த
போதிகையாய் பல இனத்து இரத்தினங்களைப் பதித்து அமைத்த
மண்டபம் இன்னொரு பக்கம்.

      போதிகை - தூணின் உச்சியில் உத்திரத்தைத் தாங்குமாறு தூணினும்
பரந்து விரிந்ததாய் அமையும் பகுதி.
 
                    41
செம்பொனா லம்பொன் மேலெழுத் தரிதிற் றீட்டிய
                              வழகெனத் தெளிந்த
வம்பொனா லிசைத்த மணிச்சுவ ரேற்றி யருந்தொழிற்
                              றச்சரு நாணப்
பைம்பொனா லிழைத்த சிகரம்வா னொட்டாப் பட்டென
                              வவ்வுல கத்தோர்
கம்பொனால் வனைந்த தொழிலையிவ் வுலகிற் கைவிடா
                              காட்டினர் போன்றே.
 
செம் பொனால் அம் பொன் மேல் எழுத்து அரிதின் தீட்டிய
                                 அழகு என, தெளிந்த
அம் பொனால் இசைத்த மணிச்சுவர் ஏற்றி, அருந் தொழில்
                                 தச்சரும் நாணப்
பைம் பொனால் இழைத்த சிகரம் வான் ஒட்டப் பட்டு என,
                                 அவ் வுலகத்தோர்
கம் பொனால் வனைந்த தொழிலை இவ் வுலகில் கை விடாக்
                                 காட்டினர் போன்றே.