பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்103

பதினைந்தாவது

சோசுவன் வெற்றிப் படலம்

     மோயிசனுக்குப் பின் யூதரை வழிநடத்தி, கானான் தேசத்தை
ஆண்டுகொண்டிருந்த மன்னரையெல்லாம் வென்று, சோசுவான் யூதரை
அங்குக் குடியமர்த்திய வெற்றிச்செய்தியைக் கூறும் பகுதி.

                   சூசையின் வேண்டுகோள்

      - - காய், - - காய், - - காய், - - காய்

                   1
தேனார்ந்த நறும்பாகிற் றெள்ளமுதிற் றீஞ்சொல்லான்
மீனார்ந்த விண்ணவர்சூழ் விழைந்திளவற் றுதிபாடக்
கானார்ந்த மலர்வாவி கடிந்தன்னார் நெடுநெறிபோய்
வானார்ந்த கதிர்சாய்ந்து வாருதி நீ ரொளித்ததுவே.
 
தேன் ஆர்ந்த நறும் பாகில், தெள் அமுதில் தீம் சொல்லால்,
மீன் ஆர்ந்த விண்ணவர் சூழ், விழைந்து இளவல் துதிபாட,
கான் ஆர்ந்த மலர் வாவி கடிந்து அன்னார் நெடுநெறிபோய்,
வான் ஆர்ந்த கதிர் சாய்ந்து வாருதி நீர் ஒளித்ததுவே.

     விண்மீன்கள் நிறைந்த விண்ணுலகிற்குரிய வானவர் தம்மைப்
புடைசூழ்ந்து, தேன் நிறைந்த நறுமணமுள்ள வெல்லப்பாகைக் காட்டிலும்,
தெளிந்த அமுதத்தைக் காட்டிலும் இனிய சொல்லால் குழந்தை நாதனின்
புகழை விருப்பத்தோடு பாடிக் கொண்டு வர, அம் மூவரும் மணம்
நிறைந்த மலர்த்தடாகத்தை விட்டு நீங்கி நெடுவழி நடந்து போன பின்னர்,
வானத்தில் ஒளி நிறைந்து நின்ற கதிரவன் மேற்கே சாய்ந்து கடல் நீரினுள்
மறைந்தது.

                    2
நீரொளித்த சுடரெழுமுன் னின்றெழுந்த நிறைநீரார்
பாரொளித்த நாதனடி பணிந்தேந்தித் துயர்க்கெஞ்சா
காரொளித்த மின்களெனக் கடுகிப்போய் நெடுநெறியின்
சூரொளித்த வானவர் தீஞ் சொல்லாட வேகினரே,