பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்116

           20
விண்காவல னார்மிட லஞ்சினராய்
மண்காவல்வ ழங்கிய சோசுவன்வாய்த்
தண்காவில டைக்கல மேதரவென்
றொண்காபன நாடரொ டுங்கினரால்.
 
"விண் காவலன் ஆர் மிடல் அஞ்சினராய்,
மண் காவல் வழங்கிய சோசுவன் வாய்,
தண் காவில், அடைக்கலமே தர என்று,
ஒண் காபன நாடர், ஒடுங்கினர் ஆல்.

     "ஒளியுள்ள காபன நாட்டார், விண்ணுலகுக்குக் காவலனாகிய ஆண்டவனின் நிறைந்த வல்லமைக்கு அஞ்சினவராய், மண்ணுலகிற்கு ஆட்சிக் காவலை வழங்கி நின்ற சோசுவனிடம் தமக்கு அடைக்கலம் தருமாறு வேண்டி, அவன் தங்கியிருந்த குளிர்ந்த சோலையில் வந்து பணிந்தனர்.

     'ஆல்' அசைநிலை.

           21
பாரஞ்சின வஞ்சின பாரினொடு
நீரஞ்சினிர் நித்தன டைக்கலம்வந்
தீரஞ்சிலி ரஞ்சிலி ரென்றனனால்
போரஞ்சில கைப்புக ழெஞ்சிலனே.
 
"பார் அஞ்சின அஞ்சின பாரினொடு
நீர் அஞ்சினிர் நித்தன் அடைக்கலம் வந் -
தீர். அஞ்சிலிர், அஞ்சிலிர்!' என்றனன் ஆல்,
போர் அஞ்சில கைப் புகழ் எஞ்சிலனே.

     "போருக்கு அஞ்சாதவனும் தன் கை வன்மையின் புகழ்
குறைபடாதவனுமாகிய சோசுவன், அக்காபனரை நோக்கி, 'இந்த வெற்றியைக்
கண்டு உலகமெல்லாம் அஞ்சின. அவ்வாறு அஞ்சிய உலகத்தோடு சேர்ந்து
நீங்களும் அஞ்சினீர்கள்; அத்துடன் நில்லாமல், என்றும் இருப்பவனாகிய
ஆண்டவன்பால் அடைக்கலமென்று வந்தீர்கள்; எனவே, அஞ்சாதீர்கள்,
அஞ்சாதீர்கள்!" என்றான்.

     'அஞ்சலிர்' என்ன வேண்டியது, எதுகை இன்னோசைப் பொருட்டு,
'அஞ்சிலிர்' என நின்றது. 'ஆல்' இடையே அசை நிலை.