பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்207

     போர்க்களத்தில் இவையெல்லாம் கூடி மயங்கி விளைவித்த அச்சம்
நிறைந்து நின்றது. வில்லை ஓசைபட வளைத்துப் பொழியும் அம்பு மழையின்
ஒலி ஒரு பக்கத்தும் நிகர் இன்றியும், தோல்வி இன்றியும், சொல்லுக்குள்
அடங்கும் அளவு இன்றியும், இரு பக்கத்தாரும் போரைத் தொடர்ந்து
கொண்டேயிருப்பர்.


                    159
சுழலெ ழத்திரி யிடிகளொ டிருமுகில் சுளிமு கத்தென
                            வரவிரு விரதமு
மழலெ ழக்குனி யிருசிலை முடிவில வழல்ப னித்தென
                            விடுகணை மழைவிழப்
புழலெ ழப்படு கணிகணை வழிவழி புனலெ னக்கறை
                            குமிழிக ளெழவிழ
நிழலெ ழப்புய லொடுகுயி லினமென நிரைநி ரைத்தெதி
                            ரிருபடை மெலியவே.
 
"சுழல் எழத் திரி இடிகளொடு இரு முகில் சுளி முகத்து என வர
                              இரு இரதமும்,
அழல் எழக் குனி இரு சிலை முடிவு இல அழல் பனித்து என
                              விடுகணை மழை விழ,
புழல் எழப் படு கணி கணை வழி வழி புனல் எனக் கறை
                              குமிழிகள் எழ விழ,
நிழல் எழப் புயலொடு குயில் இனம் என, நிரை நிரைத்து எதிர்
                              இரு படை, மெலியவே,

     "இரு மன்னர் தம் இரு தேர்களும் காற்றினால் சுழன்று எழுந்து
திரியும் இடிகளோடு கூடிய இரண்டு மேகங்கள் சினந்த முகத்தோடு
எதிர்ப்படுவது போல் வரவும், நெருப்பு எழுமாறு வளைந்த இரண்டு
வில்லுகளும் நெருப்பை முடிவில்லாமல் பொழிவது போல ஏவிய அம்பு
மழை விழுந்துகொண்டேயிருக்கவும், துளை உண்டாகுமாறு மேலே பட்ட
குறி தவறாத அம்புகள் தைத்த இடங்களினின்று வழிந்தோடிய வெள்ளம்
போல இரத்தம் குமிழிகள் எழுமாறு பாய்ந்து விழவும், அணி வகுத்து
எதிரெதிரே நின்ற இரு பக்கத்துப் படைகளும் இருளோடு எழுந்த
மேகத்தைக் கண்ட குயிலினம் போல் மெலியுமாறும்,

     இப்பாடல் குளகமாய், அடுத்த பாடலில் வரும் 'மலைகுவார்' என்ற
முடிக்குஞ் சொல்லோடு பொருள் நிறைவு பெறும்.