பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்215

"முடியொடு முடி பட வரை முனைவன என,
இடியொடு சினம் முதிர் எரி முகில் எதிர் பொரும்.
படியொடு பிரி பருப்பதம் என, அசனியின்
வெடியொடு, மழை என விழுவன உபலமே.

     "சிகரத்தோடு சிகரம் மோத மலைகள் தம்முள் போரிடுவது போல்,
இடியோடு சினம் முதிர்ந்த நெருப்போடு கூடிய மேகங்கள் தம்முள்
எதிர்த்துப் போரிடும். அதனால் மண்ணை விட்டுப் பெயர்ந்து சிதறும்
மலை போல், இடியின் வெடியோசையோடு, பெருங்கற்கள் மழை போலச்
சிதறிவிழும்.

             171
துறுவன வலியகல் துகளெழ விரதமு
மிறுவன கரிபரி யினமின மடிவன
வறுவன படையின மழிவனர் பகையவ
ருறுவன விடிகளொ டுடனவை யெரிவன.
 
"துறுவன வலிய கல் துகள் எழ இரதமும்
இறுவன; கரி பரி இனம் இனம் மடிவன;
அறுவன படை இனம்; அழிவனர் பகையவர்.
உறுவன இடிகளொடு உடன் அவை எரிவன.

     "நெருக்கமாய் விழும் பெரிய கற்களால் தேர்களும் ஒடிந்து தூளாகிச்
சிதறும். யானைகளும் குதிரைகளும் கூட்டங் கூட்டமாய் மடியும்; படைக்
கருவி வகைகள் ஒடியும்; பகைவரெல்லாம் அழிவர். அவையெல்லாம் மேலும்
விழும் இடிகளோடு சேர்ந்து எரியும்.

              172
கடியொலி யெழவிழு கலினுறை படுமொலி
யிடியொலி யிடியினு மிறுமிர தமதொலி
மடிகரி யெழுமொலி மடிபரி யெழுமொலி
முடிவில விளிகுவர் முதிரொலி நிகரில.
 
"கடி ஒலி எழ விழு கலின் உறை படும் ஒலி,
இடி ஒலி, இடியினும் இறும் இரதமது ஒலி,
மடி கரி எழும் ஒலி, மடி பரி எழும் ஒலி,
முடிவு இல விளிகுவர் முதிர் ஒலி நிகர் இல.