பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்216

     "மிக்க ஓசை எழுமாறு விழும் கல்லின் மழையால் உண்டாகும் ஒலியும்,
இடிகளின் ஒலியும், அவ்விடியையும் மிஞ்ச ஒடிந்து விழும் தேர்களின்
ஒலியும், மடியும் யானைகளால் எழும் ஒளியும், மடியும் குதிரைகளால் எழும்
ஒலியும், முடிவு இல்லாது மடியும். படை வீரரின் முதிர்ந்த ஒலியும் உவமை
இல்லாதன ஆகும்.


               173
சிந்தின சிலைமழை, சிந்தின சிலைகணை
சிந்தின பலபடை சிந்தின கரதலஞ்
சிந்தின விருகழல் சிந்தின தலைமுடி
சிந்தின வுடலுயிர் சிந்தெரி நரகுற.
 
"சிந்தின சிலை மழை, சிந்தின சிலை கணை,
சிந்தின பல படை, சிந்தின கரதலம்,
சிந்தின இரு கழல், சிந்தின தலைமுடி,
சிந்தின உடல் உயிர் சிந்து எரி நரகு உற

     "பொழிந்த கல் மழையால், வில்லுகளும் அம்புகளும் சிதைந்தன; பிற
பல படைக் கருவிகளும் சிதைந்தன; கைகளும் சிதைந்தன; இரு கால்களும்
சிதைந்தன; தலைகளும் முடிகளும் சிதைந்தன; எரியும் நரகமாகிய கடலில்
தம் உயிர் சென்று சேருமாறு அப்பகைவர் உடல்களும் சிதைந்தன.

           174
தப்பில களிறுக டப்பில புரவிக
டப்பில வபயவர் தப்பில தலையவர்
தப்பில குருசிலர் தப்பில வனையவர்
தப்பில வெமதிறை தப்பில வமர்செய.
 
"தப்பு இல களிறுகள், தப்பு இல புரவிகள்,
தப்பு இல அபயவர், தப்பு இல தலையவர்,
தப்பு இல குருசிலர், தப்பு இல அனையவர்,
தப்பு இல எமது இறை தப்பு இல அமர் செய.

     "தப்பாத வல்லமையுள்ள எம் ஆண்டவன், குற்றத்திற்கு இடமில்லாத
போரைத் தானே மேற்கொண்டு செய்தமையால், யானைகளும் தப்பவில்லை;
குதிரைகளும் தப்பவில்லை; வீரர்களும் தப்பவில்லை; படைத்தலைவரும்
தப்பவில்லை; அரசரும் தப்பவில்லை; பகைவர் அனைவருமே தப்பவில்லை.