பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்218

               177
கைவரு மொருசிலை கனையெழ வளைமுகத்
தைவரு மொருபக லழியின பினரினி
மொய்வரு சினமொடு முதலவ னமர்செயி
னுய்வரு மெவரென வெருவுறி யுருகுவார்
 
"'கை வரும் ஒரு சிலை கனை எழ வளை முகத்து
ஐவரும் ஒரு பகல் அழியின பினர், இனி.
மொய் வரு சினமொடு முதலவன் அமர் செயின்,
உய்வகும் எவர்?' என வெரு உறி உருகுவார்.

     "'சோசுவன் தன் கையில் தாங்கிய ஒரே வில்லை ஓசைப்பட வளைத்த
விடத்தே அவ்வைந்து அரசரும் ஒரு பகலுக்குள் அழிந்த பின்னர், இனி,
வல்லமை வாய்ந்த சினத்தோடு ஆண்டவனே போரிட முற்பட்டால், தப்பிப்
பிழைப்போரும் யார்?' என்று ஏனைய மக்கள் அச்சங் கொண்டு உருகுவர்.

               178
வலியவர் பகைமுனர் மடிவில ருளரெனின்
மெலியவ ரெதிரினும் வெகுளிய பலநவை
மலியவ ரெனினிறை வயவமர் சினமுனர்
பொலியவ ரெவரென வளவில புகழுவர்.
 
"'வலியவர் பகை முனர் மடிவு இலர் உளர் எளின்,
மெலியவர் எதிரினும், வெகுளிய பல நவை
மலி அவர் எனின், இறை வய அமர் சினமுனர்
பொலி அவர் எவர்?' என, அளவு இல புகழுவர்.

     "தம்மினும் வலியவரோடு கொண்ட பகையால் மடியாதவர்
உளரேனும், தம்மினும் மெலியவரே போருக்கு எதிர்ப் பட்டாலும், தாம்
இறைவனின் சீற்றத்துக்குக் காரணமான பல குற்றங்கள் மலிந்தவராய்
இருப்பின், அவ்விறைவனே வலிமை வாய்ந்த போருக்கு முற்படத் தக்க
அச்சினத்தின்முன் பொலிவாக நிற்கத்தக்கவர் எவர்?' என்ன கூறி,
அவ்விறைவனை அளவில்லாது புகழுவர்.