பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்220

     புண்ணைக் கனிவோடு ஆற்றினாற் போல் சூசை தன் துன்பம் நீங்கி
மகிழுமாறு, அவ்வானவன், கண்கனிவோடு கண்டு மகிழத் தெளிவு நிறைந்த
கதிரைத் தெளித்துத் துணியில் சித்திரமாகத் தீட்டிக் காட்டினாற் போலும்,
யாழ் கனிவோடு இசை பாடிய தன்மை போலும், விண்ணுலகம் கனிவோடு
நிகழ்த்திய இவ் வரலாற்றை வெல்லப் பாகினும் இனிய சொல்லால் விரித்துக்
கூறிக் குழந்தை நாதனின் திருவடிகளை வணங்கினான்.

     யாழும் பாகும் சொல்லின் இனிமைக்கும் சித்திரம் கருத்துத்
தெளிவிற்கும் உவமையாகக் கொள்க.

                  181
நாமஞ்சா லுயர்ந்த வீர நாயக னெளிய கோலங்
காமஞ்சா லுருத்த வன்பிற் கனிந்தெடுத் துதித்த பாலால்
வாமஞ்சால் பொறித்த பைம்பூ மலரடி வணங்கி யுள்ளத்
தேமஞ்சா லின்ப மூழ்கி யிருவரும் வியப்பின் மிக்கார்.
 
நாமம் சால் உயர்ந்த வீர நாயகன் எளிய கோலம்,
காமம் சால் உருத்த அன்பில் கனிந்து, எடுத்து உதித்த பாலால்,
வாமம் சால் பொறித்த பைம் பூ மலர் அடி வணங்கி, உள்ளத்து
ஏமம் சால் இன்பம் மூழ்கி, இருவரும், வியப்பின் மிக்கார்.

     சூசையும் மரியாளுமாகிய இருவரும், பேரால் மிக உயர்ந்த வீரத்
தலைவனாகிய ஆண்டவன், மானிடர்பால் ஆசை மிக்குத் தோன்றிய
அன்பினால் கனிந்து, இவ்வாறு எளிய கோலம் எடுத்துப் பிறந்த
தன்மையால், அழகு மிக்குத் தோன்றிய அவனது பசுமையாகப்பூத்த
மலர்போன்ற திருவடியை வணங்கி, களிப்பு மிக்க இன்பத்தில் மூழ்கித்
தம் உள்ளத்தில் வியப்பு மிகக் கொண்டனர்.

                    182
மருமணித் தொடையா ழேந்தி மரகத மணித்தாள் வைத்த
பருபணிக் காந்தட் கையாற் பயிரளி கிளைபோற் கீதந்
தருமணி நரம்பின் மேலெண் டருமிசை கிளப்ப வானோர்
திருமணிச் சாயற் றாய்தன் சிறுவனைப் பாடி னாளே.