பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்222

               184
உரையில கலைநிலையே யுயரற மடையுரையே
கரையில படர்கடலே கதியுயிர் பெறுகரையே
வரையில சுகநிலையே வளர்தவ மடைவரையே
புரையில மனுமகனே பொதிமல ரடிதொழுதேன்.
 
"உரை இல கலை நிலையே, உயர் அறம் அடை உரையே,
கரை இல படர் கடலே, கதி உயிர் பெற கரையே,
வரை இல சுக நிலையே, வளர் தவம் அடை வரையே,
புரை இல மனு மகனே, பொதி மலர் அடி தொழுதேன்,

     "உரைத்தல் இன்றியே கல்விக்கு நிலைக்களனாய் விளங்குபவனே,
உயர்ந்த அறத்தை அடைவதற்கான உரை வடிவமே, கரையில்லாது
விரிந்த நன்மைக் கடலே, உயிர்கள் மோட்ச கதி பெறுவதற்கான கரையே,
அளவில்லாத இன்ப நிலையே, வளர்ந்த தவம் சென்று சேர்ந்த மலையே,
குற்றமே இல்லாத மனித மகனே, மலர்களால் பொதியப் பெற்ற உன்
திருவடிகளைத் தொழுதேன்!

               185
மருமலி மலர் நிழலே மறைமலி யுயர்பயனே
திருமலி கரமுகிலே சிவமலி தனிமுதலே
யிருமலி யுலருளரே யிணரொடு தொழுமடியே
குருமலி யறநெறியே கொழுமல ரடி தொழுதேன்.
 
''மரு மலி மலர் நிழலே, மறை மலி உயர் பயனே,
திரு மலி கர முகிலே, சிவம் மலி தனி முதலே,
இரு மலி உலகு உளரே இணரொடு தொழும் அடியே,
குரு மலி அற நெறியே, கொழு மலர் அடி தொழுதேன்!

     "மணம் நிறைந்த மலர்ச் சோலையின் நிழல் போன்றவனே, வேதத்தில்
மலிந்து கிடக்கும் பயன்களிலெல்லாம் உயர்ந்த பயனே, செல்வம் நிறைந்த
கையால் பொழியும் மேகமே, நன்மை நிறைந்த தனி முதலே, விண்ணகம்
மண்ணகம் என விளங்கும் இரண்டு உலகங்களிலுமுள்ள யாவரும் மலரிட்டுத்
தொழும் திருவடிகளை உடையவனே, குருவாக வந்து மலியச் செய்யும்
அறநெறி வடிவமே, உனது கொழுமையான மலர் போன்ற திருவடிகளைத்
தொழுதேன்!"