பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்225

பதினாறாவது
 
சேதையோன் வெற்றிப் படலம்

     இறைவன் அருள் துணையால் சேதையோன் பகைவரை வென்ற திறம்
கூறும் பகுதி. குழந்தை நாதனின் தெய்வ வல்லமையைப் புலப்படுத்த இது
இங்கு இடம் பெற்றுள்ளது. விவரம் ப. ஏ. நீதிபதிகளாகம் 6-8 அதிகாரங்கள்
காண்க.

                பவளத் தூணில் மாணிக்கப் பாவை

     - விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா.

                      1
கிணைநிலை முரச மார்ப்பக் கீதயாழ் தெளிப்ப வேளிற்
பிணைநிலைக் கரிகள் சீறப் பிரிநிலைக் கறவை யேங்கப்
பணைநிலைப் புரவி யாலப் படரொலிக் களரி மூதூர்த்
திணைநிலைப் புறத்தி லன்னார் சிறந்த மண்
                                டபத்தி னின்றார்.
 
கிணை நிலை முரசம் ஆர்ப்ப, கீத யாழ் தெளிப்ப, வேளில்
பிணை நிலைக் கரிகள் சீற, பிரி நிலைக் கறவை ஏங்க,
பணை நிலைப் புரவி ஆல, படர் ஒலிக் களரி மூது ஊர்த்
தினை நிலைப் புறத்தில் அன்னார் சிறந்த
                           மண்டபத்தில் நின்றார்.

     நிலைத்த முரசு சிறு பறையோடு முழங்கவும், பாடலுக்குச் சிறந்த
யாழ் ஒலிக்கவும், கட்டுத் தறியில் பிணைத்த நிலையிலுள்ள யானைகள்
சீறவும், கன்றுகளைப் பிரிந்த நிலையிலுள்ள பசுக்கள் கதறவும், பந்தியில்
நிலை கொண்ட குதிரைகள் கனைக்கவுமாகப் பரவும் ஒலி மிக்க களரி
என்னும் பழமையான ஊரில், குடியிருப்பு நிலைகளின் புறத்தே, சூசையும்
மரியாளும் குழந்தை நாதனோடு ஒரு சிறந்த மண்டபத்தில் நிலை
கொண்டனர்.

     வேளில் - 'வெளில்' என்பதன் நீட்டல் விகாரம், மூதூர் - முதுமை +
ஊர் - மூது + ஊர் - மூதூர்.