பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்255

     கண்ணாகிய நெருப்பால் நோக்கி, கொலையைக் கொண்ட அம்பு
ஒன்றை ஏவும் கூற்று வளையும் மிஞ்சிய அமலேக்கு என்பான், மதியான்
அணிந்திருந்த மலைபோன்ற கவசத்தைத் தானும் அறுத்தெறிந்தான்.


                     49
வேனிகர் வடிவை வாளி வில்லிடை யவன்கோத் தெய்ய
வானிகர் விலங்க றன்னை வானுரு மறுத்தாற் போலத்
தோனிக ரமலேக் காகந் துளைத்தகோ லுருவி யப்பாற்
கானிகர் மூடர்க் கோதுங் கலையெனப் போயிற் றன்றே.
 
"வேல் நிகர் வடி வை வாளி வில்லிடை அவன் கோத்து எய்ய,
வான் நிகர் விலங்கல் தன்னை வான் உரும் அறுத்தாற் போல,
தோல் நிகர் அமலேக்கு ஆகம் துளைத்த கோல் உருவி, அப்பால்
கால் நிகர் மூடர்க்கு ஓதும் கலை எனப் போயிற்று அன்றே.


     "அம்மதியான், வேல் போல் வடிக்கப்பட்ட கூரிய அம்பை வில்லில்
கோத்து எய்யவே, வானத்து நிகராக உயர்ந்து நின்ற ஒரு மலையை
வானத்து இடி அறுத்தாற்போல, யானைக்கு நிகரான அமலேக்கின் மார்பைத்
துளைத்த அவ்வம்பு முதுகில் ஊடுருவி, காற்றுப்போல் நிலையற்ற மூடர்க்கு
ஓதும் கல்விபோல் அப்பால் போயிற்று,

     "புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற் றன்றே" என்ற
கம்பர் வாக்கு (பால காண்டம், தாடகை வதைப் படலம் 50) ஒப்பு நோக்குக.
'அன்றே' அசைநிலை.

                     50
தனம்பழுத் தமலேக் கேங்கித் தன்னுயி ருயிர்க்கும் வேலை
சினம்பழுத் துயிரைத் தாங்கித் திங்களின் பாதி கோத்துக்
கனம்பழுத் திழியே றொத்த கணையொடு முயிரும் போக்கி
மனம்பழுத் தெதிர்ந்தோன் சென்னி வலித்தறுத் திருவர்                                         மாய்ந்தார்.