பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்256

"தனம் பழுத்து அமலேக்கு ஏங்கி, தன் உயிர் உயிர்க்கும் வேலை,
சினம் பழுத்து உயிரைத் தாங்கி, திங்களின் பாதி கோத்து,
கனம் பழுத்து இழி ஏறு ஒத்த கணையொடும் உயிரும் போக்கி
மனம் பழுத்து எதிர்ந்தோன் சென்னி வலித்து அறுத்து, இருவர்                                          மாய்ந்தார்.

     "அம்புபட்டு உருவியதனால் தன் மார்பு வீங்கி அமலேக்கு ஏங்கி,
தன் உயிர் பிரியும் வேளையில் சினம் முதிர்ந்து அவ்வுயிரைத் தாங்கிக்
கொண்டு, திங்களின் பாதி போன்ற அம்பைக் கோத்து, மேகத்தில் கரு
முதிர்ந்து விழும் இடியை ஒத்த அவ்வம்பு சென்றதோடு தன் உயிரையும்
போக்கி, மனத்தில் சினம் முதிர்ந்து எதிர்த்த மதியானின் தலையை
அவ்வம்பினால் இழுத்து அறுத்ததோடு, அவ்விருவரும் ஒருங்கு மடிந்தனர்.

                 51
மாயிர விடையிற் றம்மின் மயக்கொடு வீர ரோர்நூ
றாயிர ரோடு நாலை யாயிர ரன்றி யங்கண்
டூயிர வரசிற் சூழ்ந்த சுடிகையோர் மடிந்து மூவை
யாயிர ரின்னு நிற்ப வவிர்சிகன் முளைத்த தன்றே.
 
"மா இரவு இடையில் தம்மின் மயக்கொடு, வீரர் ஓர் நூறு
ஆயிரரோடு நால் ஐயாயிரர் அன்றி, அங்கண்
தூய் இரவு அரசின் சூழ்ந்த சுடிகையோர் மடிந்து, மூ ஐ -
யாயிரர் இன்னும் நிற்ப, அவிர் சிகன் முளைத்தது அன்றே.

     "இருண்ட இரவின் இடையே பகைவர் தம்முள் மயக்கங் கொண்டு,
அதனால் ஒரு நூறாயிரவரோடு நான்கு ஐயாயிரமுமாக ஒரு லட்சத்து
இருபதினாயிரம் வீரர் மடிந்ததுமன்றி, அவ்விடத்தே தூய இரவின்
அரசனாகிய திங்கள் போல் தலையில் அணிந்த முடியை உடைய அரசர்
இருவரும் மடிந்து, பதினையாயிரம் வீரர் இன்னும் எஞ்சி நிற்க, ஒளியுள்ள
விடி வெள்ளி கீழ்வானில் முளைத்தது.

     'அன்றே' அசை நிலை.