பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்260

"தணியா வலித் திறத்தை உலகம் கண்டு தாள் துதிப்ப,
மணியால் தவழ் சுடர் செய் தூண் மன் ஆர வைத்து
                                    உயர்த்தார்;
கணியா நயன் செய் உன் ஆர்வம் காட்டும் கம்பம் என,
அணி ஆர் திரு மேனி அணிந்தாயோ?" என்று, அடி
                                    பணிந்தான்.

     "எவர்க்கும் தாழாத உன் வல்லமையின் திறத்தை உலகம் கண்டு உன்
தாளைத் துதிக்கும்படி, நீல மணியால் தவழும் ஒளியைத் தரும் அத்தூணை
அக்காலத்து யூதர் நிலை பேறாக அமைய உயர்த்தி நிறுத்தி வைத்தனர்.
இக்காலத்தில், கணக்கில்லாத நன்மை செய்யும் உன் ஆர்வத்தைக் காட்டும்
தூண்போல், அழகு நிறைந்த இத் திருவுடல் அணிந்து கொண்டு
அவதரித்தாயோ?" என்றும் கூறி, அடி பணிந்தான்.

                  58
வினையங் கடனீந்தி வழியென் றறியார் மிளிர்
                               பைம்பொன்
மனையங் கதியடைய நாட்டி வைத்த மணித்தூணே
நனையந் திருவடிநான் பிரியா வாழ்க நறும்பைம்பூ
வனையங் கதிர்மேனி யணிந்தா யோவென்
                               றடிதொழுதான்.
 
"வினை அம் கடல் நீந்தி, வழி என்று அறியார், மிளிர்
                                  பைம் பொன்
மனை அம் கதி அடைய நாட்டி வைத்த மணித் தூணே,
நனை அம் திரு அடி நான் பிரியா வாழ்க, நறும் பைம் பூ
அனை அம் கதிர் மேனி அணிந்தாயோ?" என்று,
                                  அடி தொழுதான்.

     "வழி எதுவென்று அறியாதவர், தீவினையாகிய கடலை நீந்தி,
இலங்கும் பசும் பொன் வீடாகிய மோட்ச கதியை அடையவென்று நாட்டி வைத்த மணித் தூண் போன்றவனே, உனது பூவரும்பு போன்ற
திருவடியைப் பிரியாமல் நான் வாழும் பொருட்டு, நறுமணம் பொருந்திய
பசுமையான மலர் போன்ற அழகிய கதிர் வீசும் இவ்வுடலை அணிந்து
கொண்டு தோன்றுனாயோ?" என்று கூறியும், அடி பணிந்தான்.