பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்268

     அவன் வானவரை நோக்கி, "அணியணியாகத் தேனோடு பூக்கள்
மலர்ந்த ஒரு பொன் மலையின் உச்சி மீதிருந்து நெறியாய்ப் பாய்ந்தோடிய
வெள்ளி ஆறு போல், வானத்தோடு பொருந்திய உயர்ந்த அழகிய
மாளிகையின் உச்சிமீது கோவில் கட்டப்பட்டு அசைந்தாடும் கொடியைக்
கொண்ட இந்நகரைப் பற்றிய விபரம் யாது?" என வினவினான்.

                சஞ்சோன் வீரச் செயல்கள்

      - விளம், - மா, தேமா. - விளம், - மா, தேமா

                   13
ஆசைகொண் டறைந்த மாற்ற மறஞ்சய னென்னும் வானோன்
பூசைகொண் டிறைஞ்சிக் கேட்டுப் பொழிமது வுரையிற் சொல்லும்
மாசைகொண் டொளிர்குன் றன்ன வயங்குமந் நகரை முன்னோர்
காசையென் றனர்முன் னாளென் காவலூ ரவ்வூ ரென்றான்.
 
ஆசை கொண்டு அறைந்த மாற்றம், அறஞ்சயன் என்னும் வானோன்,
பூசை கொண்டு இறைஞ்சிக் கேட்டு, பொழி மது உரையின் சொல்லும் :
"மாசை கொண்டு ஒளிர் குன்று அன்ன வயங்கும் அந் நகரை முன்னோர்
காசை என்றனர். முன் நாள் என் காவல் ஊர் அவ் ஊர்" என்றான் :

     அப்பொழுது, அறஞ்சயன் என்னும் வானவன், ஆசையோடு சூசை
வினவிய சொல்லை வணக்கத்தோடு தொழுது கேட்டு, பொழியும் மதுவைப்
போன்ற சொல்லால் பின்வருமாறு சொல்லுவான்; "பொன்னாற் செய்து
ஒளிரும் குன்று போல் விளங்கும் அந்நகரத்தை முன்னோர் காசை என்று
பெயரிட்டு அழைத்தனர். அவ்வூர் முற்காலத்தில் எனது காவலுக்கு
உட்பட்டிருந்த ஊர்" என்று, மேலும் தொடர்ந்து கூறுவான்:

     அறஞ்சயன் - அறம் + சயன் : அறத்தின் வெற்றிக்கு உரியவன்.

                   14
தோடுண்ட மணிப்பைம் பூந்தார்ச் சூசையே நீயுந் திங்கட்
கோடுண்ட பதத்தினாளுங் குழவியாய்ப் பேணு நாத
னீடுண்ட திறமும் பெண்மை யின்பமென் றிருட்டு மாசை
கேடுண்ட திறமுங் காட்டக் கிளைத்ததீங் குரைப்பல்
                                      கேண்மோ.