பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்287

     கிடந்த + அன்னை - 'கிடந்தவன்னை' என வர வேண்டியது.
'கிடந்தன்னை' எனத் தொகுத்தல் விகாரமாயிற்று. கனார் - 'கண்ணார்'
என்பதன் இடைக்குறை.


               44
ஆங்கு நானநெய்ப் பூவள கங்கெட
வீங்கு நோயினி லத்தின்வி ழுந்தடித்
தேங்கு மோதையைக் கேட்டவி ணர்க்கொடி
யோங்கு சூசையு ளத்திலி ரங்கினான்.
 
ஆங்கு நான நெய்ப் பூ அளகம் கெட,
வீங்கு நோயின் நிலத்தின் விழுந்து, அடித்து
ஏங்கும் ஓதையைக் கேட்ட இணர்க் கொடி
ஓங்கு சூசை உளத்தில் இரங்கினான்.

     அங்கு அம்மகளிர் தம் வாச நெய் பூசிய அழகிய கூந்தல்
குலைந்து கெடுமாறு, பெருகிய துயரத்தால் தரையில் விழுந்து, மார்பில்
அடித்துக் கொண்டு ஏங்கும் ஓசையைக் கேட்ட மலர்க்கொடி ஏந்திய
சூசை தன் மனத்தில் இரங்கினான்.

                45
கொம்பி லாக்கொடி போலிளங் கோதையர்
பம்பி யார்த்தழும் பாசறை நோக்கென
நம்பி நாதனை வேண்டிலி னல்லுயி
ரெம்பி ரானிடு மேவலின் மீண்டதே.
 
"கொம்பு இலாக் கொடி போல், இளங் கோதையர்
பம்பி ஆர்த்து அழும் பாசறை நோக்கு" என,
நம்பி, நாதனை வேண்டலின், நல் உயிர்
எம் பிரான் இடும் ஏவலின் மீண்டதே.

     சிறந்தவனாகிய சூசை, "கொழு கொம்பில்லாத கொடி போல்,
இவ்விள மங்கையர் நெருங்கிப் புலம்பி அழும் துன்பத்தை நோக்கி அருள்
செய்வாய்" என்று குழந்தை நாதனை வேண்டியமையால், நம் ஆண்டவன்
இடும் ஏவலால் அந்நல்லுயிர் மீண்டது.