பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்297

     எசித்தியர் அடிமையினின்று யூதரை மீட்டு உரிமை மக்களாக
வாழ்வித்தமையின், மோயிசன் யூதர் கோலை நிமிர்த்தியவன் ஆவான்.
'கோல்' இங்கு ஆட்சிக்கு ஆகுபெயர்.

     பத்துக் கட்டளைகள்

                       13
கோணிகந்தான் வானிறைவ னேவல் கொண்ட குலக்கோமான்
சேணிகந்தான் சேண்சென்ற குன்றத் துச்சி செல்கின்றா
னூணிகந்தான் றுயிலிகந்தான் வானோ ரொத்தாங்
                                    குறைந்தனகான்
மாணிகந்தார் மனம்போல விருண்டி யாவு மருண்டனவே.
 
"கோண் இகந்து ஆள் வான் இறைவன் ஏவல் கொண்ட குலக்
                                  கோமான்
சேண் இகந்தான்; சேண் சென்ற குன்றத்து உச்சி செல்கின்றான்;
ஊண் இகந்தான்; துயில் இகந்தான்; வானோர் ஒத்து ஆங்கு
                                  உறைந்தனகால்,
மாண் இகந்தார் மனம் போல இருண்டு யாவும் மருண்டனவே.

     "நீதியினின்று கோணுதல் இன்றி யாவற்றையும் ஆண்டு நடத்தும்
வானகத்துள்ள ஆண்டவன் இட்ட கட்டளையை ஏற்றுக் கொண்ட யூதர்
குல மன்னனாகிய மோயிசன் நெடுந்தூரம் கடந்து சென்றான்; அவ்வாறு
வானளாவிச் சென்ற மலையின் உச்சிக்குச் செல்கின்றான்; அங்கு
உணவையும் துறந்தான், உறக்கத்தையும் மறந்தான்; இவ்வாறு, வானவருக்கு
நிகராக அங்குத் தங்கியபோது, அறமாண்பற்றவர் மனம்போல இருண்டு,
யாவும் மயக்கம் கொண்டன.

                       14
கோடொளிப்ப வெழினியெழ வெழிலி மொய்ப்பக் குடக்கிரவிச்
சேடொளிப்ப விராவன்ன விருள்சூழ் மண்டித் திரண்டவிரு
ளீடொளிப்ப விளக்கிட்ட தேபோன் மின்னி யெரிவாய்மின்
னூடொளிப்ப வொல்கியிடித் துலக மெல்லா மொலித்தனவே.