பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்300

     "முறை பொருந்திய நல்ல கேள்வி அறிவினோடு நூல்களைக்
கற்றறிந்த புலமையிலும் சிறந்த மோயிசன், அம்மலை மீது மழைத்துளி
நிறைந்த நல்ல மேக மண்டலத்தையும் கடந்து நின்றபோது, ஒளி
பொருந்திய வானுலகத்துக்குரிய நல்ல தெய்வக் காட்சியினோடு இன்பக்
கடலில் மூழ்கி மகிழுமாறு, வேதத்திற் பொருந்தியுள்ள நல்ல பயனை
அவனுக்கு எடுத்துச் சொல்லிய ஆண்டவன், இச் சொல்லையும் அவனுக்கு
எடுத்துச் சொல்லலுற்றான்:-

     "ஆல்" அசைநிலை.

                     18
பல்லுயிரை வியவரெனப் படைத்த பின்னர் பார்த்திபர்போ
னல்லுயிரை யடைந்தமனுக் குலத்தோ ராக்கி நல்வினையும்
புல்லுயிரை யடும்வினையு மறிந்தி ரண்டிற் புலன்றேற
வல்லுயிரை யீந்துரிவேண் டுதல்வேண் டாமை வகுத்தனனே.
 
"'பல் உயிரை வியவர் எனப் படைத்த பின்னர், பார்த்திபர் போல்
நல் உயிரை அடைந்த மனுக் குலத்தோர் ஆக்கி, நல் வினையும்
புல் உயிரை அடும் வினையும் அறிந்து, இரண்டில் புலன் தேற
வல் உயிரை ஈந்து, உரி வேண்டுதல் வேண்டாமை வகுத்தனனே.

     "'பல உயிர்களையும் மனிதருக்கு ஏவலர் போல நான் படைத்த
பின்னர், அவற்றையெல்லாம் ஆளும் அரசர் போல் நல்ல உயிரைப்
பெற்றுள்ள மனித இனத்தாரையும் படைத்து, நல்வினையையும் அற்ப
உயிர்களை வாட்டி வதைக்கும் தீவினையையும் வேறுபடுத்தி அறிந்து,
இரண்டில் ஒன்றைத் தத்தம் அறிவால் தெரிந்து கொள்ளத்தக்க வல்லமை
கொண்ட ஆன்ம உயிரை அவர்களுக்குத் தந்து, அவற்றை வேண்டுதலும்
விலக்குதலுமாகிய உரிமையும் வழங்கினேன்.