பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்305

                    25
நீர்தவழ் தழலிற் கஞ்ச நிரைத்தநீள் வாவி யங்கண்
ணேர்தவழ் முகைக டண்டா திழிந்ததே னினிமை
                                    வெஃகி
வார்தவழ் முரசு வாட்டி வண்டொடு தேனு மார்க்குங்
கார்தவழ் சினைக ணீண்ட காவிடை வதிந்து நின்றார்.
 
நீர் தவழ் தழலின் கஞ்சம் நிரைத்த நீள் வாவி அங்கண்,
ஏர் தவழ் முகைகள் தண் தாது இழிந்த தேன் இனிமை
                                         வெஃகி,
வார் தவழ் முரசு வாட்டி வண்டொடு தேனும் ஆர்க்கும்,
கார் தவழ் சினைகள் நீண்ட காவிடை வதிந்து நின்றார்.

     நீரிலே தவழும் நெருப்புப் போலத் தாமரை மலர்கள் வரிசையாகப்
பூத்த நீண்ட தடாகத்தில், அழகு தவழும் அரும்புகள் மலர்ந்து குளிர்ந்த
மகரந்தத்தின் ஊடே வழிந்த தேனின் இனிமையை விரும்பி, வண்டுகளும்
தேனீக்களும் வாராற் கட்டிய முரசின் ஒலியையும் வென்று முழங்கும்
சோலையில், மேகங்கள் தவழும் கொம்புகள் நீண்டு வளர்ந்த சோலையில்,
அவர்கள் தங்கியிருந்தனர்.

                    26
பார்கெழு மடந்தை யீன்ற படர்தரு கைத்தா யாம்வான்
கார்கெழு முலைத ழீஇய கரமெனச் சினைக ணீட்டி
நீர்கெழு பாலுண் டப்பா னிழன்றுதன் றாயைக் காக்க
வேர்கெழு கைத்தாய் நோக விகன்றொளி யொளிக்குங்
                                      காவே.
 
பார் கெழு மடந்தை ஈன்ற படர்தரு, கைத் தாய் ஆம் வான்
கார் கெழு முலை தழீஇய கரம் எனச் சினைகள் நீட்டி,
நீர் கெழு பால் உண்டு, அப்பால் நிழன்று தன் தாயைக் காக்க,
ஏர் கெழு கைத் தாய் நோக இகன்று ஒளி ஒளிக்கும், காவே.

     அச் சோலையில், நிலம் என்னும் சிறந்த மங்கை பெற்றுத் தந்த
படர்ந்த மரங்கள், தம் வளர்ப்புத் தாயாகிய வானத்தில் கருமேகம் என்னும்
சிறந்த முலையைத் தழுவிக் கொண்ட கைகளைப் போலத் தம் கிளைகளை
நீட்டி, மேகத்தின் நீராகிய பாலை உண்டு, பின்னர் நிழல் தந்து தன்
தாயாகிய நிலத்தைக் காக்குமாறு, அழகு நிறைந்த தன் வளர்ப்புத் தாயாகிய
மேகம் நோகுமாறு பகைத்து ஒளியை மறைத்து நிற்கும்.