பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்326

     வானத்தில் தோன்றும் சந்திரன் தன்னைத் தாங்கி நிற்கும்
அழகிய வடிவம் கொண்ட திருவடிகளை உடைய மரியாளும், தேன்
நிறைந்த மலர்க் கொடி ஏந்தித் திருமறை வாழும் அறை போன்ற
சூசையும், ஊனோடு கூடிய மனித உருவம் கொண்ட குழந்தை நாதனின்
ஒளி பொருந்திய அடிகளைத் தொழுது ஏந்தி யெடுத்துக் கொண்டு, மணம்
பொருந்திய மலர்கள் பூத்த சிறந்த சோலை வழியாக நடந்து போயினர்.


                 3
துயிலென விரிபூங்காத் தும்பிகள் குழலாகக்
குயிலின முழவாகக் குளிர்பொழி லரங்காக
மயிலின நடமாடு மதுவழி வழிநீக்கி
யயிலென வழல்வீசு மருஞ்சுர நெறிபோனார்.
 
துயில் என விரி பூங்கா தும்பிகள் குழல் ஆக,
குயில் இனம் முழவு ஆக, குளிர் பொழில்
                            அரங்கு ஆக,
மயில் இனம் நடம் ஆடும் மது வழி வழி நீக்கி,
அயில் என அழல் வீசும் அருஞ் சுர
                            நெறி போனார்.

     ஆழ் துயிலில் மூழ்கியதுபோல் விரிந்து கிடந்த பூஞ்சோலையில்
வண்டுகள் குழல் ஊதுவனவாகவும், குயில் இனங்கள் கொம்பு
ஊதுவனவாகவும், குளிர்ந்த வனமே நாடக அரங்காகவும் கொண்டு, மயில்
இனங்கள் நடனமாடும் தேன் வழிந்தோடும் அச்சோலை வழியைக் கடந்து,
அம்புபோல் நெருப்பை அள்ளி வீசும் அரிய பாலைவனத்து வழியில்
அவர்கள் தொடர்ந்து சென்றனர்.

     சீலையைக் குறிக்கும் 'துகில்' என்ற சொல், எதுகைப் பொருட்டு,
இடைப் போலியாகத் 'துயில்' என வந்தது என்று கொண்ட பழையவுரை
தவறு. இவ்வாறு பிறிதொரு பொருள்படும் சொல் போலியாக அமைதல்
இல்லை.

                 4
நண்ணிய பொருணீங்கி நல்குர வெதிருற்ற
புண்ணிய மரபோருட் புலனயர் விலர்
                         போன்றே
மண்ணிய வனநீங்கி வசுகுடி யுறைகானங்
கண்ணிய நெறிபோகக் கண்டழு தனகாவே.