பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்344

"வலம் புங்கு அவனி மா மகள் தன் மருங்குல் மணி நீள் மேகலையோ,
சிலம்பும் பசிய பொற் சிலம்போ சிறந்த சோர்தான் நதி சேர்ந்து,
புலம்பும் திரையைக் கம்பளத்தால் புடைப்ப அரிதின் பிரித்து, நளிர்ந்து
அலம்பும் திரையில் அடி தோயாது அப்பால் கடந்த மாமுனியே.

     "வலிமை மிக்க நிலமென்னும் பெருமகளின் இடையில் அணிந்த
நீண்ட மணிமேகலையோ, அவள் காலிற் கிடந்து ஒலிக்கும் பசுமையான
சிலம்போ என்னுமாறு சிறந்து கிடந்த சோர் தான் ஆற்றை அடைந்து,
அதன் ஒலிக்கும் திரையைத் தன் போர்வையால் அடித்து அரிய விதமாய்
நடுவே பிரித்து நிறுத்தி, குளிர்ச்சியோடு இரு புறமும் அலம்பி நின்ற
திரைகளின் நடுவே கால் நனையாது அப்பால் கடந்து சென்ற
பெருமுனிவனும் இவனே.

     'பொங்கு' எனற் பாலது, 'புங்கு' என எதுகை நோக்கித் திரிந்தது.
'என்னுமாறு' என இடையே இணைப்புச் சொல் வருவிக்கப்பட்டது.

                    32
அப்பால் கடந்த போழ்திருளை யகற்றி வீசுஞ் சுடர்கண்டால்
வெப்பா லிரவி யிரதமென வேய்ந்து குளிர்ப்ப விடுங்கதிரி
னொப்பால் மதிதன் னிரதமென வுயர்நின்றிழிந்த தேரேறி
எப்பா லனைத்து மணுகாதோ ரிடத்திற் சேர்ந்த மாமுனியே.
 
"அப்பால் கடந்த போழ்து, இருளை அகற்றி வீசும் சுடர் கண்டால்,
வெப்பால், இரவி இரதமென வேய்ந்து, குளிர்ப்ப விடும் கதிரின்
ஒப்பால் மதி தன் இரதமென, உயர் நின்று இழிந்த தேர் ஏறி,
எப்பால் அனைத்தும் உணுகாத ஓர் இடத்தில் சேர்ந்த மா முனியே.

     "அவ்வாற்றைக் கடந்து அப்பால் சென்றபோது, இருளை அகற்றுமாறு
வீசும் கதிரை நோக்கினாலும், வெப்பத்தை நோக்கினாலும் ஞாயிறு தேர்
போலத் தோன்றி, பின் குளிர்ந்த தன்மையாய் விடும் கதிரின் ஒப்புமையால்