பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்351

இருபதாவது

சித்திரக்கூடப் படலம்

     எசித்து செல்லும் வழியில் திருக்குடும்பத்து மூவர் ஒரு பூஞ்சோலை
அடைந்து, அங்குள்ள முனிவர் அமைத்திருந்த சித்திரக்கூடங் கண்டு
மகிழ்ந்த செய்தியைக் கூறும் பகுதி.

                    பூஞ்சோலைச் சிறப்பு :

      - விளம், - விளம், - மா, தேமா.

                1
மாயிருள் விழுங்கவான் வாயங் காந்தெனச்
சேயிருந் தைந்திரி தெளிந்த காலெழீஇத்
தாயிரு கரத்தெழு தனயற் போற்றினர்
போயிரு புடைநிழற் பொலிசெல் வேகினார்.
 
மா இருள் விழுங்க வான் வாய் அங்காந்து என,
சேய் இருந்து ஐந்திரி தெளிந்த கால் எழீஇ,
தாய் இரு கரத்து எழு தனயற் போற்றினர்,
போய், இரு புடை நிழல் பொலி செல்வு ஏகினார்.

     கரிய இருளை விழுங்க வானம் தன் வாயைத் திறந்தாற் போல,
செந்நிறம் கொண்டு கீழ்த்திசை புலர்ந்த வேளையில் எழுந்து, தாயின் இரு
கைகளில் ஏந்திய மகனைப் போற்றியவராய் அம்மரத்தடியை விட்டுப்
போய், மூவரும் வானவரும் இரு பக்கமும் நிழலாற் பொலிந்த வழியே
சென்றனர்.

     செல்வு - செலவு.

                2
ஊன்வழங் கியபிரா னுறலிற் போற்றல்போல்
வான்வழங் கியதரு வளைத்த நெற்றியிற்
றேன்வழங் கியகனி கலந்த தேமலர்
கான்வழங் கியபொழி லெதிர்கண் டாரரோ.
 
ஊன் வழங்கிய பிரான் உறலின், போற்றல் போல்,
வான் வழங்கிய தரு வளைத்த நெற்றியில்
தேன் வழங்கிய கனி கலந்த தேன் மலர்
கான் வழங்கிய பொழில் எதிர் கண்டார் அரோ.