பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்4

அழல் குளித்த பைந் தாதோ? கண் பாய் வேலோ? அகல் வாய்ப்
                                            புண்
புழல் குளித்த செந் தீயோ? உருமோ? கூற்றோ? பொருவு இன்றி
நிழல் குளித்த உரு வானோன் கொடுஞ் சொல் கேட்டு, நெடுங்
                                            கடல் நீர்ச்
சுழல் குளித்த மனம் சோர்ந்து, வளன், அப்பணியைத் தொழுது,
                                            உளைந்தான்.

     அச் சொல்லைக்கேட்ட சூசையின் உள்ளம் நெருப்பில் மூழ்கிய
பசுமையான பூந்தாதோ? அக்கொடுஞ்சொல் கண்ணில் பாய்ந்த வேல்
தானோ? அகன்ற வாயை உடைய புண்ணின் துவாரத்துள் நுழைந்த
செந்தீயோ? இடியோ? கூற்றுவனோ? ஒப்பற்ற விதமாய் ஒளியில் மூழ்கிய
உருவத்தைக் கொண்ட அவ்வானவனின் கொடுஞ் சொல்லைக் கேட்டு,
நெடிய கடல் நீரில் உண்டான சுழியில் அகப்பட்டு மூழ்கிய தன்மையாய்
மனம் சோர்ந்து, அக்கட்டளையைச் சூசை தொழுது ஏற்றுக்கொண்டு,
பின்னும் வருந்தினான்.
 

                      6

மலிநிழற்பட் டலர்மலரின் னொய்யஞ் சேயின் மழவினையும்
பொலிநிழற்பட் டலர்பூங்கொம் பொத்தா ணொய்வும்
                                      புரைவினையா
லலிநிழற்பட் டெரியெசித்தார் நாட்டின் சேணு மாய்ந்தவளன்
புலிநிழற்பட் டேங்கியமான் போல வேங்கிப் புலம்பினனால்.

 
மலி நிழல் பட்டு அலர் மலரின் நொய் அம் சேயின் மழவினையும்,
பொலி நிழல் பட்டு அலர் பூங் கொம்பு ஒத்தாள் நொய்வும், புரை
                                           வினையால்
அலி நிழல் பட்டு எரி எசித்தார் நாட்டின் சேணும் ஆய்ந்த வளன்,
புலி நிழல் பட்டு ஏங்கிய மான் போல ஏங்கிப் புலம்பினன் ஆல்.

     நிறைந்த நிழலில் வளர்ந்து மலர்ந்த பூவினும் மென்மையான அழகிய
மகனின் இளமையையும், பொலிந்த நிழலிடையே வளர்ந்து மலர்ந்த
பூங்கொம்பு போன்ற மரியாளின் மென்மையையும், தம் பாவச் செயல்களால்
நெருப்பின் நிழலில் அகப்பட்டதுபோல எரியும் எசித்து மக்கள் வாழும்
நாட்டின் தொலைவையும் ஆராய்ந்து பார்த்த சூசை, புலியின் நிழல்
தன்மேல் பட்டு ஏங்கிய மான்போல ஏங்கிப் புலம்பினான்.