பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்425

                     118
தான்மலர் முகத்தி லோடித் தாதைதாய் தமர்கள் யாருங்
கோன்மல ரடிமுன் காட்டிக் கோன்றம ராக நோக்கித்
தேன்மலர் மருத வேலிச் சிறப்பெழு நாட்டைத் தந்து
கான்மலர் விரிகா வன்ன கடவுள்செய் நிழலில் வாழ்ந்தார்.
 
"தான் மலர் முகத்தில் ஓடி, தாதை தாய் தமர்கள் யாரும்,
கோன் மலர் அடி முன் காட்டி, கோன், தமராக நோக்கி,
தேன் மலர் மருத வேலிச் சிறப்பு எழு நாட்டைத் தந்து,
கான் மலர் விரி கா அன்ன கடவுள் செய் நிழலில் வாழ்ந்தார்.

     "ஆணரன் மலர்ந்த முகத்தோடு தான் முன் ஓடி, தன் தந்தை தாய்
சுற்றத்தார் யாவரையும், அரசனின் மலர் போன்ற அடியின் முன் பணியக்
கொண்டு காட்டினான். அரசன், அவர்களைத் தன் சுற்றத்தாராகவே
கொண்டு நோக்கி, தேன் நிறைந்த மலர்களைக் கொண்டுள்ள மருத நிலச்
சிறப்பால் உயர்ந்த நாட்டை அவர்களுக்கு உரிமையாகத் தந்தான். அதனால்,
மணமுள்ள மலர்கள் விரியும் சோலை போன்று கடவுள் தமக்கு வழங்கிய
நிழலில் அவர்கள் வாழ்ந்தனர்.

     'நாடு' என்றது, நாட்டின் ஒரு பகுதியாகிய கொசேன் என அறிக.

                     119
பணிமுகத் துரைத்த நீராற் பைங்கதிர் தெளித்த கோலான்
மணிமுகத் தெழுதப்பட்ட வளங்கதை யொழுங்கி னோக்கீர்
பிணிமுகத் திறைவன் செய்யும் பெரும்பய னருளி னாட்டி
லணிமுகத் தொருவன் செய்த வறமுல களித்த தென்றான்.
 
"பணி முகத்து உரைத்த நீரால், பைங் கதிர் தெளித்த கோலால்
மணி முகத்து எழுதப்பட்ட வளம் கதை ஒழுங்கின் நோக்கீர்;
பிணி முகத்து இறைவன் செய்யும் பெரும் பயன் அருளின் நாட்டில்
அணி முகத்து ஒருவன் செய்த அறம் உலகு அளித்தது" என்றான்.