பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்427

     ஒன்றை நேரிற் கண்டு உணர்ந்தாற்போல, அம்முனிவரும் கனிந்து
கேட்ட இவற்றையெல்லாம் பண்டு நிகழ்ந்த தன்மையாகவே உணர்ந்து,
அவ்வாறு உண்ட தேனை அருகே நின்று சொரிந்தாற் போலவும், யாழின்
ஒலியோடு கூடிய தேன் போல் இனிய பாடலைப் பாடும் தன்மை
போலவும், பின்வருமாறு பற்பல சொல்லலாயினர்:


                 122
கோன்செயுந் துணையுயிர் கொல்லுங் கூற்றமாங்
கான்செயும் வனஞ்சுடு மமிழ்துங் காளமாம்
வான்செயு மருளிலான் மனத்த துள்ளதே
லூன்செயுங் கோட்டிடை யுய்வ தாமென்பார்.
 
"கோன் செயும் துணை உயிர் கொல்லும் கூற்றம் ஆம்,
கான் செயும் வனம் சுடும், அமிழ்தும் காளம் ஆம்,
வான் செயும் அருள் இலால் மனத்து. அது உள்ளதேல்,
ஊன் செயும் கோட்டு இடை உய்வது ஆம்" என்பார்.

     "ஒருவனுக்குத் தன் மனத்துள் வானுலக ஆண்டவன் வழங்கும்
அருள் இல்லாது போனால், அரசன் செய்யும் உதவியும் உயிரைக்
கொல்லும் கூற்றுவனாய் அமைந்து விடும்; மணம் பொழியும் சோலையும்
சுடும்; அமுதமும் நஞ்சாகிவிடும்; அவ்வருள் தன் மனத்து உள்ளதேல்,
அவன் பகைவர் ஊனைத் தாங்கிய யானையின் கொம்புக்கும் தப்பிப்
பிழைப்பது கைகூடும்" என்பர்.

     'மனத்து' என்பதனை, இடைநிலை விளக்காகக் கொண்டு, பின்னும்
கூட்டுக.

             123
வீடுற வேண்டில்நீ விதித்த நூலலாற்
காடுற வொளிக்குதல் கயங்கு ளிக்குதல்
நீடுற விழுசடை நீட்டல் மற்றவை
யீடுறப் பயனிலா வெளிறி தாமென்பார்.
 
"வீடு உற வேண்டில் நீ விதித்த நூல் அலால்
காடு உற ஒளித்தல், கயம் குளிக்குதல்
நீடு உற விழு சடை நீட்டல், மற்றவை
ஈடு உறப் பயன் இலா வெளிறிது ஆம் என்பார்.